ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம், பச்சைப் பரத்தலை ஆண்டாள், ரெங்க மன்னார் பார்வையிடும் வைபவத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 4:15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆண்டாள், ரெங்க மன்னார் புறப்பட்டனர். அவர்களை வேதபிரான் சுதர்சன் ஆடிப்பூர பந்தலில் எதிர்கொண்டு வரவேற்று ஆண்டாள் பிறந்த வீடான வேதபிரான் திருமாளிகைக்கு அழைத்து வந்தார். அங்கு பல்வேறு வகையான காய் கனிகள் பரப்பப்பட்ட பச்சை பரத்தலை பார்வையிட்ட ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ராஜகோபுரம் வழியாக வடபத்ரசயனர் சன்னதியில் உள்ள கோபால விலாச மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு அரையர் சேவை, திருப்பல்லாண்டு, திருவாராதனம், கோஷ்டி நடந்தது. பின்னர் ஆண்டாள், ரெங்க மன்னார் மூலஸ்தானம் திரும்பினர்.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். டிச.29 முடிய தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள பகல் பத்து உற்ஸவமும், டிசம்பர் 30 அதிகாலை 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும், அன்று முதல் ஜனவரி 9 வரை ராப்பத்து உற்ஸவமும், ஜனவரி 8 முதல் 15 வரை எண்ணெய் காப்பு உற்ஸவமும் நடக்கிறது.