திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற பெண்கள் கைகளில் விளக்கேற்றி வழிபாடு
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றக்கோரி மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு பெண்கள் கைகளில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென அப்பகுதி பெண்கள் பல்வேறு அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 18 பெண்கள் கைதாகி விடுதலையாகினர். இந்நிலையில் நேற்று இரண்டு நீதிபதிகள் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்பகுதி பெண்கள் நேற்று மாலையில் கையில் அகல் விளக்குகளை ஏந்தி பழநி ஆண்டவர் கோயில் முன்பு நின்று தீபத்தூணில் விரைவில் தீபம் ஏற்ற முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் என அவர்கள் வழிபாடு செய்தனர். பின்பு அவர்கள் விளக்குகளை கோயில் முன்பு வைத்தனர்.