உத்தரகோசமங்கையில் மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பின்புறம் கண்மாய் கரையோரம் பழமை வாய்ந்த கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது.
இங்கு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பல்வேறு மண்டகப் படியை கடந்து மீண்டும் அழகர் கோயிலில் தனது இருப்பு நிலையை அடைந்த பின் இக்கோயிலில் தலுகை எனப்படும் அன்னதானம் விழா நடக்கிறது. இதற்காக பத்து நாட்களுக்கு முன்பாகவே உத்தரகோசமங்கை யாதவ மக்கள் திரியெடுத்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று மேளதளங்கள் முழங்க விதைப்பு என்னும் அரிசி, மிளகாய், பருப்பு உள்ளிட்ட தானியங்களை பெறுகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி காய்கறிகள் நறுக்கும் பணிகளும் பல்வேறு அண்டாக்களில் சமையல் செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு அறையில் பனை ஓலையின் மீது வடித்த சாதம் பெரிய அளவில் கொட்டப்பட்டது.
முன்னதாக மூலவர் கோவிந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு வடமாலை சாற்றப்பட்டது. கோவிந்த பெருமாள் கோயிலில் இருந்து தொட்டுக் கொடுக்கப்பட்ட மண்வெட்டியை கொண்டு குவிக்கப்பட்ட சாதத்தை கிளறி வட்டுகளில் பரிமாறப்பட்டது. மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை தொடர்ந்து பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் விழா குழுவினர் கூறியதாவது: பல நூற்றாண்டுகளாக தலுகை என்னும் அன்னதான விழாவை விமரிசையாக நடத்தி வருகிறோம். சேற்றை கிளறுவதற்கு பயன்படுவது மண்வெட்டி, அதைப்போல சோற்றை கிளறி விவசாயத்திற்கும், உழவுத் தொழிலுக்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக இப்பணியை செய்கிறோம் என்றனர்.