உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாங்கூரில் தங்க கருட சேவை; ஒரே இடத்தில் 11 பெருமாளை தரிசித்து பக்தர்கள் பரவசம்

திருநாங்கூரில் தங்க கருட சேவை; ஒரே இடத்தில் 11 பெருமாளை தரிசித்து பக்தர்கள் பரவசம்

மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழுக்கமிட்டு வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 வைணவ திவ்ய தேசங்களுல் நாராயண பெருமாள், குடமாடகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்டபெருமாள், அண்ணன்பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுந்த நாதன், மாதவபெருமாள், பார்த்தசாரதி, கோபாலன், உள்ளிட்ட 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை அம்மாவாசை மறுநாள் பிரசித்திபெற்ற 11 கருடசேவை உத்ஸவம் நடைபெறும். இவ்வாண்டு கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை 11 பெருமாள்களும் திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் எழுந்தருள சிறப்புத் திருமஞ்சணம் செய்யப்பட்டது. நேற்று இரவு 12:30 மணிக்கு மணிமாட கோயில் கோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது, அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடி பெருமாள்களை சேவித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. தமிழகம் மட்டுமன்றி பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாள்களை சேவித்து இறையருள் பெற்றனர். கருட சேவையை முன்னிட்டு எஸ்பி. ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மயிலாடுதுறை, சீர்காழியில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !