காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் 21ல் பிரம்மோத்சவம் துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சீனியர் மேலாளர் ந.சுந்தரேச ஐயர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், சங்கரா கல்லுாரி முதல்வரும், சங்கர மடத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலருமான கலைராம வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி அதிகாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. உத்சவ நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வர உள்ளனர்.
பிரம்மோத்சவத்தில், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளயை மடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர். மார்ச் 1ம் தேதி வெள்ளி ரத உத்சவம் நடக்கிறது. சங்கர மட வரவேற்புகுழு சார்பில் பிரம்மோத்சவ நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் உள்ள, 60 அடி உயர சிவன் சிலை, 40 அடி உயர நந்தி சிலைகளுக்கு, மஹா சிவராத்திரியான இன்று இரவு முழுதும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள மகா ஸ்வாமிகள் தொடர்பான கண்காட்சியை பக்தர்கள் பார்வையிடலாம். மார்ச்ச் 3ம் தேதி சந்திர கிரகணம் வருவதால் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், காலை 11:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நடை சாற்றப்பட்டிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். சங்கர மட வரவேற்புக்குழுவின் நிர்வாகிகள் பாபு, காஞ்சி ஜீவானந்தம்,சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.