தேவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கோவில்பாளையம்; தேவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தேவம்பாளையத்தில் உள்ள பழமையான மாகாளியம்மன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி மாலை திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. இரவு முதல் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை விமான கலசம் நிறுவுதலும், இரவு மூல மூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு விமான கலசங்களுக்கும், இதையடுத்து மூல மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்கினர். இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சிரவை ஆதீனம் அருட்பணி மன்றத்தினர் வேள்வி பூஜை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மண்டல பூஜை 12 நாட்கள் தினமும் மதியம் 12:00 மணிக்கு நடைபெறும்.