காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் வாகனத்தில் வீதியுலா
ADDED :14 hours ago
காஞ்சிபுரம்: மாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் விருஷபம் வாகனத்திலும், இரவு தங்கமான் வாகனத்திலும், லட்சுமி – சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இரண்டாம் நாளான நேற்று காலை, மகரம் வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் நான்கு ராஜவீதிகளில் உலா வந்தார். இரவு, வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் உலா வந்தார்.
இன்று காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் காமாட்சியம்மன் வீதியுலா வருகிறார்.
நாளை காலை தங்க சூரிய பிரபை உத்சவமும், இரவு தங்க ஹம்ஸம் வாகன உத்சவமும் நடக்கிறது.