உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை தந்திரி ஜாமின் விவகாரத்தில் திருப்பம்; கீழ் கோர்ட் கருத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை

சபரிமலை தந்திரி ஜாமின் விவகாரத்தில் திருப்பம்; கீழ் கோர்ட் கருத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை

திருவனந்தபுரம்; சபரிமலை தங்கம் கொள்ளை விவகாரத்தில் தந்திரிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என்று கீழ் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தந்திரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைது செய்யப்பட்டிருந்தார். ஸ்ரீ கோயிலின் கதவு கட்டளை வழக்கில் 13-ம் எதிரியாகவும், துவார பாலகர் வழக்கில் 16 - ம் எதிரியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருமே 90 நாட்கள் காலாவதி முடிந்த பின்னர் இயற்கையாக வழங்கப்படும் ஜாமினில் வெளியே வந்தனர். ஆனால் தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு மட்டும் விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் தந்திரிக்கு இந்த கொள்ளையில் பங்கு உள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்க சிறப்பு புலனாய்வு குழு தவறிவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சிறப்பு புலனாய்வு குழு சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதில் கீழ் நீதிமன்றத்தின் கருத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தந்திரிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன் மீது நடைபெற்ற ஆரம்ப கட்ட விவாதத்துக்கு பின்னர் கீழ் நீதிமன்றத்தின் கருத்துக்கு உயர்நீதிமன்றம் உடனடியாக தடை விதித்தது. எனினும் தந்திரிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய எதிரியான உன்னிகிருஷ்ணன் போத்தியை சபரிமலைக்கு அழைத்து வந்தது தந்திரிதான் என்று முன்னாள் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளதையும்,தங்கத் தகடுகளில் தங்கம் குறைந்து செம்பு தெரிவதால் தங்கம் பூசுவதற்கு கொண்டு செல்லலாம் என்று குறிப்பு எழுதியது தந்திரிதான் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர் இதைத்தான் சபரிமலை நிர்வாக அதிகாரி முரளிபாபு செம்பு தகடுகள் என்று திருத்தி எழுதி முறைகேடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !