அன்னூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
அன்னூர்; குன்னத்தூராம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் கம்பம் நடப்பட்டது.
சக்தி மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா கடந்த 17ம் தேதி காலை பிள்ளையார் வேள்வி வழிபாடு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வருகிற 23ம் தேதி வரை, தினமும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று கம்பம் நடப்பட்டு, கம்பத்திற்கு வழிபாடு நடந்தது. சக்தி மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 30ம் தேதி வரை, தினமும் இரவு கம்பம் சுற்றி பக்தர்கள் ஆடும் வைபவம் நடக்கிறது. வரும் 31ம் தேதி காலை பக்தர்கள் அணிக் கூடை மற்றும் தீர்த்த குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கரகம் எடுத்தல், அம்மன் அழைத்தல் நடைபெறுகிறது. ஏப். 1ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நடைபெறுகிறது. வரும் ஏப். 2ம் தேதி மாலை எருதுகளுக்கு ஆரத்தி வழிபாடும், பின்னர் எருது விரட்டலும் நடைபெறுகிறது. இரவு திருப்பூர் பவளக்கொடி குழுவின் கும்மியாட்டம் நடைபெறுகிறது.