பழநி முருகன் கோயில் கற்சிலை வேலுக்கு மண்டலபிஷேக பூர்த்தி
பழநி; பழநி முருகன் கோயில் மங்கம்மாள் மண்டபம் அருகே ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் கற்சிலை வேல் நிறுவப்பட்டு 48 நாட்கள் ஆன நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி நடந்தது.
பழநியில் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு 2024, ஆக., 24,25ல் கற்சிலை வேல் நிறுவுதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 டன் எடையில் 15 அடி உயர வேல் கருங்கல்லில் ரூ. 14.5 லட்சம் மதிப்பீட்டில் செதுக்கப்பட்டது. ஜன.,29, நிறைவடைந்த வேல் சிலை படிப்பாதை துவங்கும் பகுதியில் மங்கம்மாள் மண்டபத்திற்கு அடுத்து உள்ள மயில் சிலைக்கு முன்புறம் அமைக்கப்பட்டது. நான்கு அடி உயர பீடம் அமைக்கப்பட்டு இதனை முறைப்படி பிரதிஷ்டை செய்ய பிப்.,7,ல் மாலை முதற்கால வேள்வி துவங்கியது. பிப்.,8.,ல் திருக்குட நன்னீராட்டு விழா நடத்தி நடத்தினர். (மார்ச் 25) இன்று 48 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி யாகம் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர் வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். :