திருப்பூர் பெருமாள் கோவில்களில் ஸ்ரீராமநவமி வழிபாடு
திருப்பூர்: திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், ஸ்ரீராமநவமி விழா நேற்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீராமர் ஜென்ம திதியான பங்குனி மாத வளர்பிறை நவமி நாளில், ராமநவமி கொண்டாடப்படுகிறது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் ராமர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ராயபுரம், ராஜவிநாயகர் கோவிலில் உள்ள ராமர் சன்னதியில், ராமர் சீதாபிராட்டிக்கு சிறப்பு பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ராகவேந்திரா கோவிலில், ஸ்ரீராம நவமி பூஜைகள் நடந்தது; பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சபாபதிபுரம் வீரஆஞ்சநேயர் கோவிலில், ராமர் – சீதா மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடந்தன. தாராபுரம் ரோடு, இந்திராநகர் ஜெயமங்கல ஆஞ்சநேயர் கோவிலில், ராமர் – சீதாபிராட்டிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன; பக்தர்கள், சுவாமிகளுக்கு துளசிமாலை சாற்றி வழிபட்டனர்.