பந்தலூர் அம்மன் கோவில் திருவிழா; பூக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
பந்தலூர் அருகே பொன்னானி அருள்மிகு மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 36 ஆம் ஆண்டு தேர் திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சியும், காப்பு கட்டுதலும் நடந்தது. மதியம் மகளிர் குழுவினர் சார்பில் அன்னதானமும், உச்சகால பூஜைகள், இரவு சிறுவர் சிறுமிகளுக்கான கலை நிகழ்ச்சிகள், தொடர்ந்து அம்மன் குடியழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இரண்டாம் நாள் காலை சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து ஆற்றங்கரையில் இருந்து, பால் காவடி, பறவை காவடி, அக்னி ரத யாத்திரை, உறுமி மேளம், நாதஸ்வரம், சிங்காரி மேளம், பழங்குடியினர் இசையுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து அன்னதானமும், மாலை தேர் ஊர்வலமும் நடந்தது. மூன்றாம் நாள் காலை பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார அபிஷேக பூஜைகளும், அம்மனுக்கு நீர் வெட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜை, அம்மன் கரகம், வீடுகள் தோறும் சென்று பூஜைகள் பெற்று, இரவு ஆற்றங்கரையில் குடி விடுதலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், மகளிர் குழுவினர், செவன் ஸ்டார் விளையாட்டு குழுவினர், கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர்.