சென்னை முருகன், சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்
சென்னை: சென்னை, புறநகரில் உள்ள முருகன், சிவன் கோவில்களில் பங்குனி உத்திர திருநாள் விழாவை முன்னிட்டு நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
வடபழனியில் அமைந்துள்ள முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா, விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான விழா, கடந்த மாதம், 29ம் தேதி லட்சார்ச்சனையுடன் துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். பங்குனி உத்திரமான நேற்று காலை, தீர்த்தவாரி நடந்தது.
நேற்று அதிகாலை முதல், பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலை நோக்கி வந்தனர். பால் காவடி, வேல் காவடி மற்றும் அலகு குத்தி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் வசதிக்காக, கோவில் வளாகத்தினுள் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, இன்று முதல் 4ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா, வேதபாராயணம், திருமுறை மற்றும் நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. முதல் நாள் தெப்பத்தில் வடபழனி முருகன் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை; மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடு நடக்கிறது. இதேபோல், சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இதில், தீர்த்தவாரி, சுவாமி திருக்கல்யாண வைபவங்கள் நடந்தன.
போலீசார் மீது பக்தர்கள் அதிருப்தி: வடபழனி முருகன் கோவிலில் விசேஷ நாட்கள், திருவிழாக்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த சமயத்தில் வரிசையில் நிற்காமல், எந்த கட்டணமும் செலுத்தாமல், கருவறை முன் அமர்ந்து பலரும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதற்கு, பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படும் போலீசாரே காரணம் என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களை, கூட்டத்தில் முண்டியடித்து அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைக்கின்றனர். நேற்று நடந்த பங்குனி உத்திர திருவிழாவின்போதும், குழந்தைகள், முதியோர் என, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது, போலீசார் அதே அத்துமீறலை நடத்தியது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.