உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் பங்குனி உத்திரம் திருவிழா: பக்தர்கள் பரவசம்

ஊட்டி, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் பங்குனி உத்திரம் திருவிழா: பக்தர்கள் பரவசம்

ஊட்டி, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில்களில் பங்குனி உத்திரதிருவிழா விமரிசையாக நடந்தது.


குன்னுார் சரவணமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. குன்னுார் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடங்கள் மற்றும் காவடிகளை ஏந்தி, 5 கி.மீ., துாரம் ஊர்வலமாக வந்தனர். பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


* வெலிங்டன் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கணபதி, சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு மூல மந்திர ஹோமங்கள், அபிஷேகம், அலங்காரம் கணபதி பூஜை, திருக்கல்யாண உற்சவம், மகா தீபாராதனை , ஊஞ்சல் உற்சவம் இடம்பெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெலிங்டன் பகுதி பக்தர்கள் செய்திருந்தனர்.


* ஊட்டி எல்க்ஹில் மலையில் எழுந்தருளி இருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, 12:30 மணி அளவில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகன் தேர் ஊர்வலம் துவங்கியது. பால தண்டாயுதபாணி கோவிலில் இருந்து துவங்கிய தேர் ஊட்டி நகரில் மாரியம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலம் வந்தது.


முன்னதாக பக்தர்கள், பாறை முனீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து சென்றனர். மாவட்ட முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !