உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரில் இன்று ‘சங்கீத மும்மூர்த்திகள்’ இசை நாடகம்

பெங்களூரில் இன்று ‘சங்கீத மும்மூர்த்திகள்’ இசை நாடகம்

பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட, ‘சங்கீத மும்மூர்த்திகள்’ இசை நாடகம், இன்று பெங்களூரில் நடக்கிறது.

யுனைடெட் விஷுவல்ஸ் குழுவினர் வழங்கும் இந்தச் சிறப்பு நாடகம், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள சவுடய்யா நினைவு மண்டபத்தில் இன்று காலை, 10:30 மணியளவில் நடைபெற உள்ளது.

பிரபல கலைஞர், ‘டிவி’ வரதராஜன் இயக்கி, தலைமை தாங்கி நடிக்கும் இந்த நாடகத்திற்கு, கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இசையமைத்துள்ளார். வி.எஸ்.வி.,-யின் கருத்தாக்கத்தில், சி.வி.சந்திரமோகன் மற்றும் ‘டிவி’ வரதராஜன் ஆகியோரின் வசனங்களில், இந்த இசைச் சங்கமம் உருவாகியுள்ளது.

மேடையில் சியாமா சாஸ்திரியாக வரதராஜன், தியாகராஜராக கலாஷேத்ராவைச் சேர்ந்த பாலகுருநாதன் மற்றும் முத்துசாமி தீட்சிதராக கொல்கத்தா ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன், 25-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேடையில் தோன்றி மும்மூர்த்திகளின் பக்தி மற்றும் இசை மேன்மையை கண்முன் நிறுத்த உள்ளனர்.

இந்த நாடகத்தில் இடம்பெறும் பாடல்களை விஜய் சிவா, அம்ரித் ராம்நாத், ஸ்ரீராம் பரசுராம் உள்ளிட்ட முன்னணி இசைக்கலைஞர்கள் பாடியுள்ளனர். இசை, பாடல் மற்றும் நடனம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு காவியமாகப் படைக்கப்பட்டுள்ள இந்த நாடகம், ஏற்கனவே தமிழகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெங்களூரு இசை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நாடகத்தினை கலை மற்றும் கலாசாரத்தின் மீது ஆர்வம் கொண்ட அனைவரும் பார்க்க நாடக குழுவினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !