வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சிவபெருமான் திருவடியில், நான்கு வேதங்களே வேதமலைக் குன்றுகளாக வீற்றுள்ளன. அதர்வண குன்றில், சிவபெருமான் சுயம்புலிங்கமாக தோன்றி, கோவில் கொண்டு, வேதகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன், தரைப்பகுதியில் உள்ள கோவிலில் அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் சித்திரை பெருவிழாவிற்காக, கடந்த மார்ச் 6ம் தேதி, கால்கோள்கள் நடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, விக்னேஸ்வரர் உத்சவம், மிருத்சங்கரணம் வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு, வேதமந்திரங்கள் முழங்கி, சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமியர், மலைக்கோவில் அடிவாரம் சென்றனர். மலைக்கோவிலில் இருந்து, தீபாராதனை பெற்று, மாடவீதிகளில் உலா சென்றனர். இரவு, புண்ணியகோடி விமான வேதகிரீஸ்வரர், பஞ்சமூர்த்தி சுவாமியர் உத்சவம் நடந்தது. சுவாமி, வரும் 30ம் தேதி வரை, தினமும் காலை, இரவு என, வெவ்வேறு வாகனத்தில் சேவையாற்றி, வீதியுலா செல்கிறார். முக்கிய உத்சவங்களாக, வெள்ளி அதிகாரநந்தி சேவையில் வேதகிரீஸ்வரர், 63 நாயன்மார்கள் கிரிவலம், வரும் 27ம் தேதி, பஞ்சமூர்த்தி சுவாமியர் திருத்தேர் உலா நடக்கிறது. நாளை சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு, 63 நாயன்மார்கள் உத்சவத்தை, காலை 2:00 மணி முதல், 5:00 மணிக்குள் நடத்த, மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தி உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.