கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் மே 4ல் தீமிதி உற்சவம்
புதுச்சேரி: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வரும் 1ம் தேதி நடக்கிறது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. உற்சவத்தை முன்னிட்டு 9ம் நாளாக நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதில், வரும் 1ம் தேதி திரவுபதியம்மன் சுவாமி திருக்கல்யாண உற்சவம், 3ம் தேதி காலை தேர் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 6ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.