கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான தரிசனம்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருடம் தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் கூத்தாண்டவர் சித்திரை திருவிழா கடந்த 14-ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் கூத்தாண்டவர் அலங்கரிக்கப்பட்டு நடைபெற்று வெகு விமர்சையாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தாலி கட்டிக் கொண்டனர். தொடர்ந்து கூத்தாண்டவர் திருத்தேர் அலங்காரத்திற்கு கூத்தாண்டவர் சிரசு கூவாகம் கிராமத்திலிருந்தும், கை, கால், கொடி, குதிரை, நத்தம் கிராமத்திலிருந்தும், மார்பு, புஜம், கிரிமேடு கிராமத்திலிருந்தும், குடை சிவலியங்குளம் கிராமத்திலிருந்தும், மற்றும் திருத்தேர் அச்சாணி தொட்டி கிராமத்திலிருந்தும் முறைப்படி கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி கூத்தாண்டவரை வைத்து திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் போட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.