மகிஷாசூரனை பக்தர்கள் வழிபடும் அதிசய கோவில்
ஹிந்து புராணங்களின்படி மகிஷாசூரன் என்பவர் சக்தி வாய்ந்த அசுரனாக பார்க்கப்படுகிறார். பாதி மனிதனாகவும், பாதி எருமையாகவும் உருமாறும் திறன் கொண்டவர். மக்களை கொடுமைப்படுத்திய அவரை காளி வதம் செய்ததால், அதனை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
ஆனாலும், மகிஷாசூரனை சிலர் தங்களின் கடவுள் என்று கூறி வழிபடுகின்றனர். அவருக்காக ஒரு கோவிலும் கட்டப்பட்டு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா... ஆனால், அதுதான் உண்மை.
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியின் பர்கூரில் மகிஷாசூரன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து, மகிஷாசூரனின் சிலையை வழிபட்டு செல்கின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை தொட்டில் சேவை நிகழ்ச்சியும் இங்கு நடக்கிறது.
மகி என்றால் பூமி. ஈஷா என்றால், கடவுள் அல்லது பேரரசர் என்று பொருள்படுவதால், மகிஷாசூரனை வணங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோவிலின் அர்ச்சகரான பாஸ்கர் சாஸ்திரி கூறுகையில், ‘‘சிவபெருமானின் முதல் வடிவம் என்பதால் மகிஷாவை பக்தர்கள் தினமும் வழிபட்டு செல்கின்றனர். இந்த இடம் முன்பு மகிஷா மண்டலம் என்றே அழைக்கப்பட்டது.
கருவறையில் உள்ள மகிஷாசூரன் சிலை, கொம்புகளுடைய தலைகளுடன் கூடிய மனித உடலை கொண்டதாக உள்ளது,’’ என்றார்.
பொதுவாக, கடலோர மாவட்டங்கள் அதன் தனித்துவமான பாரம்பரியங்களுக்கு பெயர் பெற்றது என்பதற்கு, மகிஷாசூரனுக்கு கோவில் கட்டப்பட்டதே உதாரணம். கோவில் நடை தினமும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரையும் திறந்து இருக்கும். உடுப்பிக்கு சுற்றுலா செல்வோர், இந்த அதிசய கோவிலையும் ஒரு முறை பார்த்து வரலாம்.