மத சடங்குகள் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தால் நம் நாகரிகமும், மத கட்டமைப்பும் சிதைந்து விடும்
‘மத நடைமுறைகள் மற்றும் சடங்குகள் பற்றி ஒவ்வொன்றாக நீதிமன்றங்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், மத கட்டமைப்பும், நாட்டின் நாகரிகத்தின் அடிப்படையுமே சிதைந்து விடும்’ என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும் மத சுதந்திரத்தின் எல்லைகள் குறித்து, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. கலப்பின திருமணம் சபரிமலை மட்டுமின்றி, தாவூதி போரா மற்றும் பார்சி சமூகத்தில், கலப்பின திருமணம் செய்த பெண்களை சமூகத்தை விட்டே விலக்கி வைக்கும் விவகாரத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தாக்கல் செய்தது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பி இருந்தது. 13வது நாளாக நேற்றும், தாவூதி போரா சமூகத்தில் பெண்களுக்கு பாகுபாடு காட்டுவது தொடர்பான வாத, பிரதிவாதங்கள் நடந்தன. அப்போது, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் சில கேள்விகளை எழுப்பினர். அதன் விபரம்: நம் சமூகத்தில் மதம் என்பது பிரிக்க முடியாத அளவில் பின்னி பிணைந்துள்ளது. ஆண், பெண், குழந்தை என பேதங்கள் இல்லாமல், மதம் மனிதர்களுடன் தொடர்பு கொண்டது. ஒவ்வொரு மத சடங்கிற்கும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் முறையிட்டால், இந்த நாகரிகம் என்னவாகும்? கோவிலை திறப்பது, மூடுவது போன்ற சின்னஞ்சிறிய விஷயத்திற்கு கூட, நுாற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யும் அபாயம் ஏற்படும். பன்முகத்தன்மை, வேற்றுமை இருந்தாலும், நம் நாடு சிறந்த நாகரிகம் கொண்டது. தனிநபர்களுக்கும், அமைப்புகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை நீதிமன்றம் களைய முற்பட்டால், ஒவ்வொரு மதமும் உடைந்து சிதறிவிடும். அதன் பின், அனைத்து நீதிமன்றங்களையும் மூட வேண்டிய சூழல் தான் உருவாகும். முன்னேறி வரும் நாட்டில், எந்த எல்லை வரை நாம் தலையிட முடியும் என்பது தான், தற்போது எழுந்திருக்கும் முக்கியமான கேள்வி. அதற்கு தான் நாம் அவசியம் விடை காண வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தாவூதி போரா சமூகத்தின் மதச் சடங்குகளை எதிர்த்து சீர்திருத்தவாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், ‘‘அரசியல் சாசனத்தின் 25 மற்றும் 26வது பிரிவின் கீழ் வழங்கப்படும் மதச் சுதந்திரம் என்பது தனிநபரின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. ‘‘நாகரிக சமூகத்தில் அரசியல் சாசனத்திற்கு எதிரான எந்த விஷயத்தையும் தொடர அனுமதிக்கக் கூடாது,’’ என்றார். அளவுகோல் இதை தொடர்ந்து பேசிய நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ‘‘ஒரு குறிப்பிட்ட மத நடைமுறை அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செல்லுபடியாகுமா என ஆராய்வதற்கு, அரசியலமைப்பு ஒழுக்க நெறியை அளவுகோலாக பயன்படுத்த முடியாது. ‘‘எனவே, 26வது பிரிவின் கீழ் உள்ள ஒழுக்க நெறிக்குள், அரசியலமைப்பு ஒழுக்க நெறி என்ற சொல்லை பொருத்தி பார்ப்பது, அந்த விதியை விளக்குவதற்கான சரியான வழியாக இருக்காது,’’ என்றார். அடுத்த வாரம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. – டில்லி சிறப்பு நிருபர் –