உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதங்கநல்லூரில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த சூலக்கல் கண்டுபிடிப்பு

மருதங்கநல்லூரில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த சூலக்கல் கண்டுபிடிப்பு

இளையான்குடி: இளையான்குடி அருகே மருதங்கநல்லூர் கிராமத்தில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த சேதுபதி காலத்தை சேர்ந்த சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சேதுராமு கூறியதாவது,


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள மருதங்கநல்லூர் கிராமத்தில் பழமையான கல்வெட்டு ஒன்று உள்ளதாக அந்த ஊரை சேர்ந்த எஸ்.ரவிச்சந்திரன் கொடுத்த தகவலில் பேரில் அவ்வூரில் உள்ள கண்மாய்க் கரையில் அழகிய திரு வேட்டை அய்யனார் கோயில் அருகில் திரிசூலக்கல் கல்வெட்டு ஒன்று நடப்பட்டு இருந்து. வினோதமாக இக்கல்லை அப்பகுதி மக்கள் மாலையிட்டு காணிக்கை செலுத்தி வணங்கி வருகிறார்கள்.அந்த சூழக்கல்லை நான் ஆய்வு செய்தபோது, அது சிவன் கோயிலுக்கு சேதுபதிகள் காலத்தில் தானம் செய்ததை தெரிவிக்கும் கல்வெட்டு என்பது தெரிய வந்தது. ஒன்றேகால் அடி அகலம் உள்ள இக்கல் 4 அடி உயரம் வெளியில் தெரியும்படி உள்ளது. கல்லில் நான்கு புறமும் கல்வெட்டுகள் உள்ளன. கண்மாய் கரையில் இருப்பதால் மிகவும் அதிகமான ஆழத்தில் பதிந்துள்ளது. எனவே கல்வெட்டு எழுத்துக்கள் முழுவதும் படிக்க முடியாத நிலையில் கீழே புதைந்து உள்ளது. *கல்வெட்டு செய்தி


அரச குடும்பத்தார்கள், செல்வந்தர்கள், பொதுமக்கள் கோயில் மற்றும் மடங்களுக்கு நிலம், பொன், விளக்கு, தானியங்களை தானமாக வழங்கியதை கல்வெட்டுகள் மூலம் தெரிவிப்பார்கள். சிவாலயங்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலங்களுக்கு திரிசூலக் கல்லும், பெருமாள் கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களுக்கு திருவாலி கல்லும் நடுவது அக்காலத்து வழக்கமாகும். இக்கல்வெட்டில் திரிசூலம் பதிவாகி உள்ளதால் இது சிவன் கோயிலுக்கு நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு என்பது தெளிவாகிறது. இந்த தானத்தை கிழவன் சேதுபதி கொடுத்துள்ளார். எழுத்துக்கள் பூமிக்குள் மறைத்திருப்பதால் எந்த திருக்கோயிலுக்கு தானம் கொடுத்தார்கள் என்பதை அறிய முடியவில்லை. இருப்பினும் இதே ஊரை கூத்தன் சேதுபதி தனது ஆட்சிக் காலமாகிய கி. பி. 1631 இல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு தானம் செய்துள்ளார் என்பதை அவரது செப்பேடு தெரிவிக்கிறது. ( கமுதி அருகில் ஒரு மருதங்கநல்லூர் உள்ளது. இருப்பினும் சேதுபதிகளின் பூர்வீகமாகிய விரையாதகண்டன் என்ற ஊர் இவ்வூருக்கு அருகில் இருப்பதால்,கூத்தன் சேதுபதி காலத்தில் தானமாக வழங்கிய இடம் இங்கே உள்ள ஊர்தான் என்பது பொருத்தமாகும்) எனவே கிழவன் சேதுபதியும் அதே ஊரை இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கி கல்வெட்டில் பதிவு செய்து எல்லைக் கல்லாக இந்த சூழக்கல்லை நட்டு வைத்திருக்கலாம். கல்வெட்டில் உள்ள விபரம் இந்த சூழக்கல்லின் முதல் பக்கத்தில், கல்லின் மேல் பகுதியின் நடுவில், சூலமும் இடதுபுறம் சூரியனும் வலது புறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது சிவன் கோயிலுக்கு தானம் கொடுத்த தகவல் உள்ள கல்வெட்டாகும். அதன் அடிப்புறத்தில், இக்கல்வெட்டு நடப்பட்ட ஆண்டான சுபஸ்ரீ சாலிவாகன சகாத்தம் 1631 சறுவாரி வருடம் என்று தகவல் உள்ளது. 


மற்றவை பூமிக்கு அடியில் பதிந்துள்ளது. சாலிவாகன சகாத்தம் 1631 என்பதின் பொது வருடம் 1709 ஆகும். அக்காலக் கட்டத்தில் இப்பகுதியை ஆட்சி செய்தவர், ரெகுநாத கிழவன் சேதுபதியாகும். (1730 இல் தான் சசிவர்ண பெரிய உடைய தேவரால் சிவகங்கை சீமை உருவாக்கப் பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ) இரண்டாம் பக்கத்தில் சுப ஸ்ரீமன் மகா மண்டலேசுரன் என்ற சேதுபதிகளின் விருதாவளி பெயர்களுடன் ரெகுநாத தேவர் அவர்கள் புத்திரன் ஸ்ரீ ரெகுநாத சேதுபதி தேவர் என்று உள்ளது. இராமேசுவரம் இராமநாதசுவாமியை வணங்கும் சேது காவலர்களாகிய சேதுபதிகள் தங்களை ரெகுநாதன் (ராமநாதன்) என்பார்கள். எனவே இங்கே கிழவன் சேதுபதி, ரெகுநாத தேவர் (ராமனின்) புத்திரன் என்று குறித்துள்ளனர். மூன்றாம் பக்கத்தில், சேதுபதிகளிலின் எல்லைக்குள் பட்ட மங்கள நாட்டில் உள்ள மருதங்கநல்லூரை சர்வ மானியமாக கொடுத்த விபரம் உள்ளது. மேலும் அதனை பரிபாலனம் செய்தவர்கள் கோடி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த புண்ணியம் அடைவார்கள் என்றும் உள்ளது. சோழர்கள், பாண்டியர்கள் நாட்டின் நிர்வாக வசதிக்காக தங்கள் நாட்டை பல வள நாடுகளாகவும், நாடுகளாகவும் அதாவது தற்போதைய மாவட்டம், வட்டம் போன்று பிரித்து வைத்திருந்தார்கள். (அதனைத் தொடர்ந்து வந்த சேதிபதிகளும் அதைப் பின்பற்றி வந்துள்ளதால் பட்ட மங்கள நாட்டில் என்று குறிப்பிட்டுளார்கள் . அடுத்த நான்காவது பக்கத்தில் , இந்த தர்மத்திற்கு அகுதம் செய்பவர்கள் தனுஷ்கோடியிலே என்பதுடன் எழுத்துக்கள் மறைந்துள்ளது. அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகமான "இந்த தர்மத்திற்கு எவராவது தீங்கு விளைவித்தால் அவர்கள் தனுஷ்கோடியிலே கங்கை கரையிலே காராம்பசுவை கொண்ற பாவத்தை அடைவார்கள்" என்பதாம். பண்டைய கால மக்கள் வாழ்விடம். இந்த சூலக்கல் உள்ள மருதங்கநல்லூர் கண்மாய்க்கு உள்ளேயும் அதன் அருகில் உள்ள திடல்களிலும் பல ஏக்கர் பரப்பளவில் பண்டைய கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென்படுகிறது. பளபளப்பான கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஒடுகளும், தடித்த முதுமக்கள் தாளியின் ஓடுகளும் காணப்படுகிறது. எனவே இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தற்போதைய காலங்கள் வரை மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ஆனால் தற்போது இந்த இடங்களில் மக்களின் குடியிருப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொல்லியல் துறையினர் பூமிக்கு அடியில் உள்ள கல்வெடையும், இப்பகுதியையும் ஆய்வு செய்தால் முழு விபரமும் தெரிய வரும். வரலாற்றுச் செய்தி முந்தைய காலங்களில் பாண்டியர்கள், சோழர்கள், சிங்களர்கள் தங்களுடைய படையெடுப்பிற்கு இப்பகுதியை முக்கிய தளமாக பயன்படுத்தி உள்ளார்கள் என்பது வரலாற்று செய்தியாகும். மதுரையிலிருந்து இலங்கை செல்வதற்கு மானாமதுரை, மருதங்கநல்லூர் அருகில் உள்ள ஊரான நெட்டூர், காளையார் கோயில் தொண்டியை முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி உள்ளனர். இவ்வூரின் அருகில் உள்ள நெட்டூரில் சிற்றரசரின் கோட்டை இருந்ததால் இப்பகுதியில் பெரும் போர் அடிக்கடி நடந்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !