சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் வைகாசி விழா கொடியேற்றம்
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மே 15 ல் விநாயகர் சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளி காணிக்கை பெற்றார். பத்து நாட்கள் விநாயகருக்கு அங்கேயே அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணிக்கு விநாயகர் மீண்டும் கோயில் திரும்பியதை அடுத்து திருவிழா தொடங்கியது. மதியம் 1:35 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். மதியம் 1:45 மணிக்கு பிடாரியம்மன் சன்னதி கொடிமரத்திலும், மதியம் 2:15 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனார் சன்னதி முன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் பாரம்பரிய முறைப்படி ஏடு படித்து ஐயனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டினர். 10 நாள் மண்டகபடியாக தினமும் பகல், இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. மே 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூரணை புட்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மே 29 ம் தேதி கழுவன் விரட்டு திருவிழா, ஜூன் 1ம் தேதி தேரோட்டம், ஜூன் 2ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.