நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் சுவாமி புறப்பாடு நேரத்தில் தொடரும் நெரிசல்
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில், சுவாமி புறப்பாடு நேரத்தில் வாகனங்கள் குறுக்கிடுவதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோவில். இது, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோத்சவம் 10 நாட்களும், தொடர்ந்து 3 நாட்கள் விடையாற்றி உத்சவமும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான வைகாசி பிரம்மோத்சவ கொடியேற்றம், 21ம் தேதி காலை நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை கருட சேவையும், மாலை அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், வாண வேடிக்கைகள் மற்றும் மங்கல வாத்தியம் முழங்க நான்கு மாட வீதிகளில் நடந்து வருகின்றன. இந்நிலையில், நான்கு மாடவீதிகளான அனுமந்தபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, மண்டபத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகளாலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: மாலை நேர சுவாமி புறப்பாடு நேரத்தில், வழக்கமாக அனுமந்தபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மண்டபத்தெரு வழியாகவும், மண்டபத்தெருவில் சுவாமி வரும் போது அனுமந்தபுரம் சாலையிலும், வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். இந்த ஆண்டு, அதுபோல மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, பக்தர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை, அனுமன் வாகன புறப்பாடு நடந்தபோது, பாதம் தாங்கிகள் மீது இருசக்கர வாகன ஓட்டி மோதியதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு, போலீசார் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைக்கவில்லை. கோவில் பகுதியில் சிறிது நேரம் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, மாடவீதிகளை சுற்றி சாலையில் நிறுத்தப்படுள்ள வாகனங்களை அகற்றி, எவ்வித இடையூறும் இல்லாமல், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.