சூலக்கல் மாரியம்மன் திருவிழா தேரில் பவனி வந்த அம்மன்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து அம்மன் அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவிலில், கடந்த, 11ம் தேதி முகூர்த்த கால் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா துவங்கியது. வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா மற்றும் கிராமசாந்தி நடந்தது. கடந்த, 19ம் தேதி இரவு, கம்பம் நாடுதல், பூவோடு எடுத்தலும், 20ம் தேதி கொடியேற்றமும் நடந்தது. கடந்த, 21ம் தேதி முதல், 26ம் தேதி வரை, தினமும் காலை, மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண் பக்தர்கள் ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடுகளில் மடிப்பிச்சை எடுத்தும், அடி அளந்தும் வழிபாடு செய்தனர். மடிப்பிச்சை காணிக்கையை கோவிலில் ஒப்படைத்தனர். நேற்றுமுன்தினம் மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, காலை மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதன்பின், உற்சவர் மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல் நடந்தது. மாலை, 5:10 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நடந்தது. 50 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், 15 அடி உயர தேரில், விநாயகப்பெருமானும் அருள்பாலித்தனர்.
விநாயகர் தேர் முதலில் வடம் பிடிக்க, அம்மன் எழுந்தருளிய தேர் பின்தொடர்ந்து பவனி வந்தது. பக்தர்கள் வாழைப்பழங்களை வீசி, ‘தாயே மாரியம்மா’ என, கோஷமிட்டு வழிபட்டனர். விழாவில், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார் மற்றும் ஜமீன் குடும்பத்தினர், எம்.பி., ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ., நித்தியானந்தன், செயல் அலுவலர் சீனிவாசசம்பத், அறங்காவலர்கள் பங்கேற்றனர். போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரைவீரன் கோவில் வீதியில் தேர் முதல்நாள் நிலை நிறுத்தப்பட்டது. இன்று இரண்டாம் நாள் தேரோட்டமும், நாளை மூன்றாம் நாள் தேரோட்டமும் நடக்கிறது. வரும், 31ம் தேதி மதியம், மஹா அபிஷேகம் நடக்கிறது.