உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையை நிலைநிறுத்துவதே சனாதன தர்மத்தின் தனிச்சிறப்பு சிருங்கேரி ஜகத்குரு அருளுரை

உண்மையை நிலைநிறுத்துவதே சனாதன தர்மத்தின் தனிச்சிறப்பு சிருங்கேரி ஜகத்குரு அருளுரை

 திருப்பூர்: அறிவுத்தேடலை ஊக்குவிப்பதும், தர்க்க ரீதியான விவாதங்களின் வழியாக உண்மையை நிலைநாட்டுவதுமே சனாதன தர்மத்தின் தனிச்சிறப்பு எனச் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் அருளுரை வழங்கினார்.

நேபாளத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், அங்குள்ள பல்வேறு ஆன்மிகக் கூட்டங்களில் அருளுரை வழங்கி வருகிறார். அங்கு அவர் ஆற்றிய அருளுரை:

சனாதன தர்மம் என்பது வெறும் நம்பிக்கைகளின் தொகுப்பு மட்டும் அல்ல; அது வினாக்களின் வாயிலாக மெய்ம்மையை அடையும் தர்க்கபூர்வமான மரபு. நமது சாஸ்திரங்கள் எதனையும் ஆதாரமின்றி உரைப்பதில்லை. ஒவ்வொரு கருத்தும் தர்க்கத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய தர்க்கநெறியே, ஒருவன் தனது சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள வினா எழுப்புவதை ஊக்கப்படுத்துகிறது.

கேள்வி கேட்கும் உரிமை கேள்வி கேட்கக்கூடாது என்பது சனாதன தர்மத்தின் பாணியே அல்ல. மாறாக, நம்முடைய ரிஷிகளும், ஆன்றோர்களும் வினாக்களுக்குத் தெளிவான விடையளிப்பதையே தங்களின் முதன்மைக் கடமையாகக் கொண்டிருந்தனர். நம்மிடம் உள்ள வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் தத்துவ நூல்கள் அனைத்தும், காலங்காலமாகப் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்குச் சான்றோர்களும், அருளாளர்களும் அளித்த விளக்கவுரைகளின் தொகுப்பாகும்.

நமது மரபின் பெருமை ஆன்மிகம் சார்ந்த நுட்பமான உண்மைகளை அறிய முற்படும்போது, மனித மனதில் இயல்பாகவே பல வினாக்கள் எழுகின்றன. அத்தகைய வினாக்களுக்கு முழுமையான தீர்வை வழங்கவே, நம் முன்னோர்கள் ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், பல்லாயிரக்கணக்கான தத்துவ நுால்களைப் படைத்துள்ளனர். அறிவுத்தேடலை மதிக்கின்ற இந்தத் தனித்துவமே நமது மரபின் பெருமை.இவ்வாறு அவர் அருளுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !