உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் சிறப்பு தரிசனமே கூடாது. பக்தர்களுக்கு உரிய வசதிகள் வேண்டும்

கோவில்களில் சிறப்பு தரிசனமே கூடாது. பக்தர்களுக்கு உரிய வசதிகள் வேண்டும்

"இறைவன் சன்னதியில் உலகத்து உயிர்கள் அனைத்தும் ஒன்றுதான்" - இந்த ஆன்மிக யதார்த்தத்தை அண்மையில் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடத்திய அதிரடி ஆய்வு நிரூபித்துள்ளது. கோவில்களில் சிறப்புத் தரிசனம் என்ற பெயரில் நடக்கும் கட்டண வசூல் முறைகேடுகளையும், சாமானிய மக்களைக் காக்க வைக்கும் அவலங்களையும் அமைச்சர் நேரில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பாக மக்களின் கருத்துகள் இதோ:

சிறப்புத் தரிசனமே கூடாது

பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்புத் தரிசன நடைமுறை இருப்பதால், பணம் செலுத்துவோருக்கு முன்னுரிமை கொடுத்து, கட்டணம் செலுத்தாத ஏழைப் பொதுமக்களை மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கிறார்கள். சிறப்புத் தரிசன முறையை முற்றிலுமாக ரத்து செய்து, அனைவரும் ஒரே வரிசையில் வந்தால் முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற பேச்சுகளுக்கே இடமிருக்காது; வரிசையும் வேகமாக நகரும். கட்டணக் கொள்ளையில் காட்டும் கவனத்தை, பெண்களுக்குத் தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தருவதில் அரசு காட்ட வேண்டும்.

சுதா, நாச்சிபாளையம்


ஆதிக்கம் ஒழிய வேண்டும்

திருச்செந்துார் கோவிலில் வசூல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. திருப்பூரிலுள்ள பெரிய கோவில்களிலும் இந்த அவலம் நடக்கிறது. தட்டில் அதிகக் காணிக்கை வைப்பவர்களுக்குச் சாமியின் மாலையை எடுத்துப் போட்டுச் சிறப்புத் தீபாராதனை காட்டுகிறார்கள். அதிகாரிகள், அறங்காவலர்களின் உறவினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வந்தால் முன்பக்கம் கூட்டிச் சென்று தரிசனம் தருகிறார்கள். அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஏழைகளையும் நடுத்தர மக்களையும் சரியாகச் சாமி கூட கும்பிட விடாமல் உடனே அகற்றி விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

புவனேஸ்வரி, அனுப்பர்பாளையம்

இறைவன் முன் அனைவரும் சமம்

வாராவாரம் தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களுக்குச் சென்று வருகிறோம். சிவனடியார்களின் உழவாரப்பணியால்தான் இன்று பல கோவில்கள் துாய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன; மற்றபடி போதிய பணியாளர்கள் வசதி அரசிடம் கிடையாது. பக்தர்கள் 6 மணி நேரம் வரை காத்துக் கிடக்கும் அவலத்தை நீக்கச் சிறப்புத் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்ட நேரம் காத்திருக்கும் பகுதிகளில் கழிவறை, குடிநீர் மற்றும் பிரசாத வசதிகளை முறையாகச் செய்து தர வேண்டும். வி.ஐ.பி-யாக இருந்தாலும் சாதாரணப் பக்தராக இருந்தாலும் இறைவன் முன் அனைவரும் சமமே!

வளர்மதி, திருப்பூர்

காத்திருக்க தேவையில்லை

கோவில்களின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளில் அரசு தலையிடக் கூடாது. வி.ஐ.பி தரிசனம் என்றால், அதற்குப் பிரத்யேகமாக இரண்டு மணி நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும்; அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மற்ற பக்தர்கள் அந்த நேரத்தில் சென்று காத்துக் கிடக்கத் தேவையில்லை. கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைச் சிறப்பு வழியில் அனுப்பலாம். திருப்பதி போன்ற வெளிமாநிலக் கோவில்களில் இருப்பது போல, காத்திருக்கும் அறைகளிலேயே தரமான குடிநீர், கழிப்பிடம், மின்விசிறி மற்றும் குழந்தைகளுக்குப் பால் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்தால், பக்தர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமைதியாகக் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

சிவ பாலசுப்பிரமணியம், திருப்பூர்

பாகுபாட்டை ஒழிப்பதே அறம்


கடவுள் முன்பு அனைவரும் சமம் என்கிற போது, பணக்காரர்களை மட்டும் முதலில் அனுமதிப்பது மிகப்பெரிய பாவம். அனைத்துக் கோவில்களிலும் சிறப்புத் தரிசன முறையை ரத்து செய்துவிட்டு, ஒரே வரிசைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அவிநாசிபாளையம் ராமசாமி கோவிலில் புரட்டாசி மாதத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். ஆனால், அங்கு ஒரு மேற்கூரையோ, கழிப்பிட வசதியோ கூட இல்லை. மழை பெய்தால் பக்தர்கள் திருவிழாக் கடைகளில்தான் ஒதுங்க வேண்டியுள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பை அரசு முதலில் பலப்படுத்த வேண்டும்.

பரமசிவம், சேரன் நகர்.

துாய வாரியமாகட்டும்

பல நுாறு ஆண்டுகள் பழமையான நம்ம ஊர்க் கோவில்களின் பூஜை மற்றும் தினசரித் தேவைகளுக்காக முன்னோர்கள் தங்களது விலைமதிப்பற்ற சொத்துக்களைத் தானமாக அளித்துள்ளனர். ஆனால், இன்று அந்தச் சொத்துக்கள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்துவிட்டன. கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளும், கட்டணங்களும் கூட அந்தந்தக் கோவில் பணிகளுக்கோ அல்லது பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்கோ முழுமையாகப் பயன்படுவதில்லை.

திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் போல, பக்தர்கள் தரும் பணம் முதலில் அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கே செலவிடப்பட வேண்டும். அங்கு சென்றால் தங்குமிடம் முதல் தரிசனம் வரை பணமின்றி எளிய மக்களும் நிம்மதியாக இறைவனை வழிபட முடிகிறது. ஆனால், தமிழகக் கோவில்களில் எதற்கெடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; பதிலுக்கு ஒரு சிறு அடிப்படை வசதி கூட செய்து தருவதில்லை. எனவே, இந்தச் சிறப்புக் கட்டணத் தரிசன முறையை அரசு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.

பிற மத வழிபாட்டுத் தலங்களைப் போல இல்லாமல், தமிழக அரசின் அறநிலையத்துறை என்பது ஹிந்துக்களின் மத சுதந்திரத்தை நசுக்கும் விதமாகவே செயல்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அறநிலையத்துறையைத் தனித்து இயங்கும் ஒரு சுதந்திர வாரியமாக மாற்ற வேண்டும். ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் துறவிகளைக் கொண்ட ஒரு தூய்மையான வாரியத்தை அமைத்து, அதன் மூலமே கோவில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும். புதிய அரசு இதில் உரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

முத்துரத்தினம், பூச்சக்காடு

அவிநாசியின் புனிதம் காக்க முனைப்பு அவசியம்

கொங்கு மண்டலத்தின் தலைசிறந்த ஆன்மிக அடையாளமாக, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமை உடைய தலமாக விளங்குவது திருப்புக்கொளியூர் எனும் அவிநாசிப் பதியாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் அருட்பாடலால், மூன்றாண்டுகள் முன்பு முதலை விழுங்கிய மழலையை, கால மாற்றத்துடன் அதே மூன்றாண்டு வளர்ச்சியோடு மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலம் இது.

இந்த உன்னதச் செயல் நிகழ்ந்த இடம் தாமரைக்குளம் என்னும் புனித நீர்நிலையாகும். ஆனால், இன்று அந்தத் தாமரைக்குளம் கழிவுநீரால் மாசுபட்டு, முள் மரங்கள் மண்டிக் கிடப்பதால் பக்தர்கள் அண்டவே முடியாத அளவுக்கு அசுத்தமாகக் காட்சியளிக்கிறது. பல ஆண்டுகளாகப் போராடியும் எந்தப் பலனும் இல்லை.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் திருவிழா நாட்களில் பக்தர்களுக்குப் போதிய குடிநீர் வசதியோ, நிழற்பந்தல்களோ இல்லை. பாரம்பரியமிக்கத் திருநந்தவனம் இன்று பராமரிப்பின்றி வாகன நிறுத்தமாக மாறிவிட்டது. பிரதோஷ காலங்களில் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெயில், மழையில் தவிக்கிறார்கள். கோவிலை ஒட்டி ஓடும் நல்லாறு நதியில் அசுத்தங்கள் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, மன நிம்மதியுடன் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு அவிநாசியின் புனிதத்தைக் காக்க நன்முயற்சி எடுக்க வேண்டும்.

காமாட்சி தாச சுவாமிகள், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !