உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று காஞ்சிப்பெரியவர் பிறந்த தினம்; காஞ்சி மகாபெரியவர் பாதம் பணிவோம்

இன்று காஞ்சிப்பெரியவர் பிறந்த தினம்; காஞ்சி மகாபெரியவர் பாதம் பணிவோம்

உலகம் நலமாய் வாழவேண்டும் என்றால், பாரதம் வாழவேண்டும். பாரதம் வாழவேண்டும் என்றால் அதன் தர்மமும், அது சார்ந்த மரபுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தர்மத்திற்கு வேதமே வேர். அந்த வேரில் நீரூற்றி, பணமே பெரிதென அலையும் உலகில், எளிமையே ஏற்றமென வாழ்ந்துகாட்டிச் சொல்ல வந்த அவதார மூர்த்திதான், நாம் மஹா பெரியவா என்று அன்புடன் அழைக்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

விழுப்புரத்தில், 1894 வைகாசி அனுஷத்தன்று, மகாலட்சுமி– சுப்ரமண்ய சாஸ்திரிகள் தம்பதியின் மகனாகப் பிறந்தார் மகான். மூத்த மகனுக்கு கணபதி என்று பெயரிட்டிருந்ததால், இவருக்கு சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினர். அவர்களுடைய குலதெய்வத்தின் பெயரை ஏற்ற அந்தப் பிள்ளை, மனித குலத்துக்கே தெய்வமாக விளங்கப் போகிறது என்பதை அப்போது யாரேனும் அறிந்திருப்பார்களோ?

திண்டிவனத்திலுள்ள அமெரிக்கன் மிஷன் பள்ளியில் படித்தார். அனைத்துப் பாடங்களிலும் முதன்மையாக நின்றார். பரிசுகளை அள்ளிச்சென்றார். ஏன்.. பைபிள் தேர்விலும் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். 12 வயதில் பள்ளியில் மாணவர்கள் ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றை மேடையேறி நடித்தார்கள். அதில் இளவரசராக மிகச்சிறப்பாக நடித்து பரிசு வென்றார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 66 ஆவது பீடாதிபதியாய் இருந்தவர், சுவாமிநாதனின் வயதுக்கு மீறிய அறிவு கண்டு வியந்து அவரை 67 ஆவது பீடாதிபதியாக்க விரும்பினார். ஆனால், அதற்குள் அவர் சித்தியடைந்தார். அவரைத் தொடர்ந்த ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏழே நாட்கள் பீடத்தை அலங்கரித்து சித்தியடைந்தார். இவர் சுவாமிநாதனின் ஒன்றுவிட்ட சகோதரர். ஆறுதல் சொல்லச் சென்ற வேளையில், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அடுத்த பீடாதிபதி சுவாமிநாதன் என்று தீர்மானமானது! இதுதான் இறைவனின் சித்தம்.

1907, பிப். 13ல், சுவாமிநாதன், காஞ்சி மடத்தின் 68 ஆவது பீடாதிபதியாகி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்னும் திருநாமம் பெற்றார். அன்றிலிருந்து 87 ஆண்டுகள் இந்த நாடெங்கும் காலாற நடந்து, நம்முடைய தர்மம் தழைக்கவும், நாம் தர்மத்தை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டிச் செய்த தொண்டை செய்தார். ஒரு பீடாதிபதி என்ற முறையில் கடுமையான விதிகளைப் பின்பற்றினார். மற்றவர்கள் நினைத்துப்பார்க்க முடியாத விரதங்களைக் கடைப்பிடித்தார். தொடர்ந்து சில நாட்கள் பட்டினி கிடந்தபோதும், தன்னுடைய தினசரி பூஜை, ஜெபம், தரிசனம், பிரசாதம் வழங்குதல், வந்தவர்களுடைய குறைகளைக் கேட்டு அறிவுரை அருளல், நிர்வாகம் எதிலும் ஒரு துளியும் குறையாமல் நடந்துகொண்டார்.

வேதங்கள், சாத்திரங்கள் அனைத்திலும் விற்பன்னராக விளங்கினார். மிக அரிய தத்துவங்களைப் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கும் அருட்சொற்பொழிவாளராக இருந்தார். தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் அங்கேயே பிறருக்கு விநியோகித்தார். சிலர் அவரிடம் நேரில் குறைகளைச் சொல்லி நிவாரணம் பெற்றனர். ஆனால், பலர் சொல்லாமலே.ேயே, அவர்களுடைய துன்பத்தை அறிந்து அதைத் துடைத்த கருணை வள்ளல் அவர். எல்லா விவரங்களும் எப்போதும் நினைவிருக்கும் யோகியாகவும், எதிலும் பற்றிலாத ஞானியாகவும், எளியவர்க்கும் எளியவரான பக்தராகவும் சமுதாயத்தில் திறந்த புத்தகமாகவும் வாழ்ந்த இந்தச் செம்மலை நடமாடும் தெய்வம் என்று நாடே கொண்டாடியதில் வியப்பில்லை.

நம்முடைய வரலாறு, பிற நாடுகளில் நம்முடைய பண்பாட்டின் தாக்கம், வடமொழி– தமிழ் இடையே உள்ள ஒற்றுமை, கல்வெட்டுகள், சிற்பம், தல வரலாறு போன்ற பலவற்றிலும் இடைவிடாது ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை நமக்குத் தெரிவித்தார்.இன்றைக்கும் வேத பாடசாலைகள் நடைபெற்று வேதம் முழங்குவதற்கும், கோவில்களில் திருப்பணி நடப்பதற்கும் மகாசுவாமிகளின் பெருமுயற்சியே காரணம்.எல்லோரும் செய்யக்கூடிய சில பணிகளைச் செய்தே ஆகவேண்டிய பணிகள் என்று சொல்லி, நம்மைச் செய்யத் தூண்டினார்.

வீட்டுக்கு உழைப்பது போல் நாட்டுக்கு உழைக்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தினம் இறைவழிபாடு நடக்கவேண்டும். குழந்தைகளுக்கு சுலோகங்கள், தேவாரம், பாசுரங்கள் இவற்றைக் கற்றுத்தரவேண்டும். உடம்பால் திருத்தொண்டு செய்யவேண்டும். உடலால் செய்யும் திருப்பணி சித்தத்தைச் சுத்தமாக்கும். கோயில்களைப் பாதுகாக்கும் பொருட்டு, நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்யவேண்டும் . பசுவை தெய்வமாக, தர்மமாக மதித்துப் போற்றவேண்டும்

பிடியரிசித் திட்டம், வீணாய் விட்டெறியும் காய்கறித் தோலைத் திரட்டிக் கால்நடைகளுக்குத் தருவது, பசுவுக்குப் புல் கொடுப்பது, அநாதையாக இறந்தவர்களுக்கு மரியாதையுடன் ஈமக்கடன் செய்வது, கோவிலில் விளக்கெரிய எண்ணெய் ஊற்றுவது...இது போன்ற எத்தனையோ செயல்களை சமய – சமூக இயக்கங்களாக மாற்றிய பெருமை அவரையே சாரும்.

· தாய் தந்தையரை மதிக்கவேண்டும். அவர்களுடைய வயதான காலத்தில் அவர்கள் மனம்நோகும்படி நடந்துகொள்ளக் கூடாது  நமக்குப் பணிவிடை செய்பவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது.குலதெய்வ வழிபாடு, சுமங்கலிப் பிரார்த்தனை இவற்றை விடாமல் செய்து வந்தாலேயே பலவிதமான தடைகளும் நீங்கும். சந்ததி தழைக்கும்.

அன்றாட அனுஷ்டானங்கள், அமாவாசை தர்ப்பணம், ஆண்டுதோறும் திவசம் ஆகியவற்றைத் தவறாமல் செய்துவர வேண்டும். இவ்வாறு பல உபதேசங்கள் செய்த அவர் ஏழையாகவே வாழ்ந்தார். அதே சமயம் எண்ணற்றவர்களுக்கு அருள்செய்தார். ஒவ்வொரு நாளும் அவரைக் காண, பாமரர்கள், படித்தவர்கள், பசித்தவர்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள். அவர் ஒரேதரமான இறைவனாக இருந்து பலவிதமாக அருள்பாலித்தார்.பற்பல மொழிகளில் விற்பன்னராக விளங்கியவரை வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து சந்தித்த வண்ணமிருந்தனர். எல்லோர்க்கும் அவருடைய சந்நிதியில் சாந்தி கிடைத்தது. சஞ்சலம் தீர்ந்தது. இனிமேல் சரியாக வாழ்வோம் என்னும் நம்பிக்கைக் வந்தது.

’’இறைவன் ஒருவனே! இருப்பது அவனே! அவனை, நம்முடைய கடமைகளைப் பற்றின்றிச் செய்து, மற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளை அன்புடன் செய்து, நமக்கென்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து இங்கேயே இப்போதே அடையலாம்,” என்னும் நம்பிக்கையை அவர் நாடெங்கும் ஊன்றியபடி நடந்துசென்றார். பணம்தான் பெரிது என்று மனித சமுதாயமே நிழலைத் துரத்திக்கொண்டு வாழ்வின் பயனையே வீணாக்கிக்கொண்டிருக்கிறது. குணமே பெரிது என்பதைத் தனது வாழ்க்கையின் மூலமே நிரூபித்துக் காட்டினார்.

அவருடைய வாசகங்கள் அவருடைய வாழ்க்கையின் விளக்கமாகவே இருந்தன. அவருடைய வாழ்க்கையும் அவருடைய வாசகங்களுக்கு விளக்கமாகவே திகழ்ந்தது.

ஒரு பசுத்தொழுவம், இடிந்த கட்டிடம், சிறுகோவில், மரத்தடி இவையே இவர் நாடெங்கும் மேற்கொண்ட பயணங்களின்போது வசித்த இடங்கள்! ஓர் ஊரிலிருந்து கிளம்பும்போது அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்ததை எல்லாம் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பிச் செல்லவேண்டும். அவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்தவர்களே அவரைப் பின்பற்றி நடக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்பதாக ஓர் ஒப்பற்ற கொள்கையை வைத்திருந்தார். முழுக்க முழுக்க நம்மோடேயே இருந்து, நாம் அவரை எப்போதும் பார்க்கும்படியே வாழ்ந்து, அதே சமயம் தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்திருந்த அதிசயமான தபஸ்வி அவர். அவரைக் கண்டவர்களுக்கு, நாம் தெய்வத்தை நேரில் கண்டோம் என்னும் நெகிழ்ச்சி கலந்த நிறைவு இருக்கிறது. அவரைக் காணாதவர்களுக்கும் அவர் தங்களுடனேயே இருந்து வழி நடத்துகின்றார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இரண்டுமே சத்தியம்தான், அவரைப் போலவே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !