ராமேஸ்வரம் கோயிலில் திருப்பணியில் பழைய ஓடுக்கு பாலீஷ் : பக்தர்கள் அதிர்ச்சி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் உபகோயிலில் ரூ.22 லட்சத்தில் நடக்கும் திருப்பணியில், பழைய ஓட்டை துடைத்து புதுப்பிக்கும் பணியை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான காட்டுபிள்ளையார் கோயில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. அக்காலத்தில் பக்தர்கள் முதலில் இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலுக்கு செல்வது வழக்கம். பழமையான இக்கோயிலில் 2025ல் தி.மு.க., ஆட்சியில் ரூ. 22 லட்சம் செலவில் திருப்பணிகள் துவங்கியது.
இதில் கோயில் சுற்றியுள்ள சுவர்கள் வார்னீஷ் செய்தும், கோபுரத்தில் மராமத்து செய்து வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் கோயில் சன்னதி முன்புள்ள பழைய ஓடு கொட்டகையை அகற்றாமல், பழைய ஓடுகள், பனை மரத்தடிகளை தண்ணீரில் சுத்தம் செய்து காவி மற்றும் கருப்பு கலர் பூசி புதுப்பித்து மீண்டும் பொருத்தினர். இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பணி திட்ட மதிப்பின்படி பழைய ஓடுகள், பனைமர தடிகளை மராமத்து செய்து புதுப்பிக்கும் பணி நடக்கிறது என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல பொறுப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில் : திருப்பணிக்கு ரூ. 22 லட்சம் செலவிட்ட ஹிந்து அறநிலைத்துறை, பழைய ஓடுகளை அகற்றி புதிய ஓடுகள் பொருத்தினால் நிதி கஜானா காலியாகி விடுமா, புதிய ஓடு பொருத்த கஞ்சத்தனம் ஏன்?. பழைய ஓடுக்கு மீண்டும் வர்ணம் பூசி பொருத்தினால், ஒரிரு ஆண்டுகளில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே புதிய ஓடுகளை பொருத்திட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.