அய்யலுார் கோயில் திருவிழாவில் கழு மரத்தில் தவறி விழுந்த பூஜாரி
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் கழு மரம் ஏறிய போது உச்சியிலிருந்து பூஜாரி தவறி விழுந்தார். கீழே நின்றிருந்தவர்கள் தாக்கி பிடித்ததால் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
முத்தாலம்மன் கோயில் திருவிழாக்களில் பாரம்பாரியமாக படுகளம் அமைத்து கழு மரம் ஏறும் நிகழ்வு நடக்கும். பாரம்பரியமாக மரம் ஏறும் உரிமை பெற்ற குழுவினர் ஏறி உச்சியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பர். கோயில் முன்பாக படுகளம் வழிபாடு முடிந்ததும் அவர்கள் கீழே இறங்குவதும் வழக்கம். இந்த நிகழ்வில் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் மரம் ஏறும்போது தவறி விழுந்தால் தாங்கி பிடிக்கும் நோக்கில் ஒரு குழுவினர் காத்திருப்பதும் வழக்கம். இந்நிலையில் அய்யலூர் ஏ.கோம்பையில் ஜூன்3ல் துவங்கிய முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நேற்று மாலை படுகளம் நிகழ்வுக்காக 45 அடி உயரமுள்ள 2 கழு மரங்கள் நடப்பட்டிருந்தது. இதில் பூஜாரி சின்ராஜ் 40 உள்ளிட்ட குழுவினர் கழு மரங்களில் ஏறினர். உச்சியை சென்றடையும் நிலையில் இருந்த சின்ராஜ் எதிர்பாராமல் கீழே தவறி விழுந்தார். கீழே விழுவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியாகினர். மரத்திற்கு கீழே இருந்தவர்கள் சின்ராஜ் முழு வேகத்தில் தரையில் விழுவதை தடுத்து தாக்கி பிடித்து உதவினர். இதனால் கைகள், இடுப்பு பகுதியில் காயங்களுடன் சின்ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரை தாங்கி பிடித்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுபோன்ற நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.