சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசன விழா அடிப்படை வசதிகள் செய்ய உத்தரவு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் அனைத்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு சப் கலெக்டர் உத்தரவிட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழியில் ஆருத்ரா தரிசன விழா, ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனம் ஆகிய இரு தரிசன விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 21ம் தேதி தேரோட்டமும், 22ம் தேதி ஆனித் திருமஞ்சனம் நடக்கிறது. விழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சப் கலெக்டர் தனலட்சுமி (பொறுப்பு) தலைமை தாங்கினார். தாசில்தார் ஹரிதாஸ், சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப், தீயணைப்பு துறை அலுவலர் ரமேஷ், மின்துறை செயற்பொறியாளர் சந்திரபானு, மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரன், நடராஜர் கோயில்பொது தீட்சிதர்கள் ராஜ கணேசன் தீட்சிதர், சோமு தீட்சிதர், சபாபதி தீட்சிதர் மற்றும் பல அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் 21ம் தேதி தேரோட்டமும், 22ம் ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, நடமாடும் 108 ஆம்புலன்ஸ், நான்கு வீதிகளில் போக்குவரத்து மாற்றம், திருட்டு சம்பவங்கள் தடுப்பதற்கு சி.சி.டி.வி., அமைத்தல், சாலைகளை சரி செய்யதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருப்பதை அனைத்து துறை அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தரிசன விழாவை முன்கூட்டியே சரியான நேரத்தில் முடிக்க வேண்டும், தேரிலிருந்து சுவாமியை இறக்கி கோவிலுக்குள் செல்லும்போது திரை போட்டு மறைத்து செல்லக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.