தேவநாத சுவாமி கோவிலில் மகா தேசிகன் சுவாமி மங்களாசாசனம்
கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீமத் பரமபரி ஸ்ரீவராஹ மகா தேசிகன் சுவாமி மங்களாசாசனம் நிகழ்த்தினார்.
கடலுார், திருவந்திபுரம் தே வநாத சுவாமி கோவில் 108 திவ்ய தேசங்களின் ஒன்றாக உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு, சித்திரை மாத உற்சவம், புரட்டாசி மாத வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம், தேசிகர் உற்சவம் உள்ளிட்டவை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஸ்ரீமத் பரமபரி ஸ்ரீவராஹ மகா தேசிகன் சுவாமி நேற்று காலை வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தேவநாத பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ராமர் சன்னதி, தேசிகர் சுவாமி சன்னதிகளில் மங்களாசாசனம் நிகழ்த்தினார்.