உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 350 ஆண்டுகளாக மத நல்லிணக்க விழா; முஸ்லீம்களுடன் மொகரம் கொண்டாடும் இந்துக்கள்

350 ஆண்டுகளாக மத நல்லிணக்க விழா; முஸ்லீம்களுடன் மொகரம் கொண்டாடும் இந்துக்கள்

கண்டவராயன்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் வஞ்சினிப்பட்டியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வழிபாட்டுன் இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.

இக்கிராமத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து மொகரம் பண்டிகையை சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றனர். இந்துக்கள் ‛அல்லாசாமி பூக்குழித் திருவிழா’ என்ற பெயரில் இஸ்லாமியர்களுடன் இணைந்து நடத்துகின்றனர். இங்கு வசிக்கும் இந்துக்கள் விருந்தினர்களுக்கு கறி விருந்து வைத்தும், இஸ்லாமியர்கள் சைவ உணவு உண்டும் விரதம் இருந்தும் விழாவை கொண்டாடினர். மொகரம் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்களால் பாத்தியா ஒதப்பட்டது. அப்பகுதி கிராமத்தினர் மல்லிகை பூ, சா்க்கரை வைத்து இரு கைகளை குவித்து அல்லாவை நினைத்து வணங்கினா்.

பின்பு கூடாரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதிகாலை 4 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னர்  கூடாரம் வாசலில் பெரியதாக வளர்க்கப்பட்ட பூக்குழியை, 3 முறை சுற்றி வலம் வந்தனா். அதன்பிறகு விரதம் இருந்தவர்கள் பலரும் சட்டை அணியாமல் பூக்குழிக்குள் இறங்கி நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனா். அப்போது சுற்றி இருந்த ஆண்கள், பக்தர்கள் இறங்கிய பூக்குழிக்களில் இருந்து மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க, பெண்கள் அதை தங்களது முந்தானையில் வாங்கிச் நெஞ்சில் வைத்து பின்பு கீழே கொட்டி வினோதமான முறையில் வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். அப்போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். பூக்குழியில் உள்ள சாம்பலை பிரசாதமாக அள்ளி, இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் பூசி விட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !