நாலுார் புராதன கோவில் புனரமைப்பு விரைவில் பணிகள் தொடக்கம்
பொன்னேரி: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இடிந்து விழும் நிலையில் இருந்த புராதன கோவிலில் ஆய்வு நடத்திய அறநிலைய துறை அதிகாரிகள், புனரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, நாலுார் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நாகமல்லீஸ்வரர் உடனுறை அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில், தற்போது இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. கோவிலை புனரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பித்தும், இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 9ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், அறநிலைய துறை செயல் அலுவலர் சங்கரன் மற்றும் ஆய்வாளர் ஒருவர், கோவிலில் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு பின், ‘கோவில் புனரமைப்புக்குத் தேவையான நிதி பெற, உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர்.