கரிய மாணிக்க பெருமாள் கோவில் சுவரில் விரிசல் புனரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: களக்காட்டூர் கரிய மாணிக்க பெருமாள் கோவில் சுவர் பராமரிப்பு இல்லாமல் விரிசலடைந்து சேதமடைந்து வருகிறது. கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூரில், கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் வனபோஜன உத்சவத்தின்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இக்கோவிலில் எழுந்தருள்வார். பராமரிப்பு இல்லாததால், கோவில் சுவரில் விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்து வருகிறது. எனவே, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், நலிந்த கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இதில், களக்காட்டூர் கரிய மாணிக்க பெருமாள் கோவிலை புனரமைக்க, 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், ‘டெண்டர்’ விடப்பட்டு ஓரிரு மாதங்களில் கோவிலில் திருப்பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.