ஐந்தாம் படை வீட்டில் ஆடிக்கிருத்திகை; முருகனை வழிபடும் முறைகள்
தல புராணம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணிகை. அசுரர்களை சூரசம்ஹாரம் செய்து, தணிகைக்கு எழுந்தருளி வள்ளியை மணந்து அருள்பாலித்து வரும் திருத்தலம். அசுரர்களுடன் போர் செய்து சினம் தணிந்து வீற்றுருப்பதால் இத்தலத்திற்கு, ‘தணிகை’ என பெயர் பெற்றது. குன்று தோறாடல்’ என்பது முருகன் எழுந்தருளிய மலை தலங்களில் எல்லாவற்றிலுமே குறிக்கும். இருப்பினும், திருத்தணிகை தலத்திலேயே தனிச்சிறப்பு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
மும்மூர்த்திகள் வழிபட்ட திருத்தலம்
சிவபெருமான்: திருத்தணிகை முருகன் திருக்கோவில், மும்மூர்த்திகளும் வழிபட்ட தலமாகும். சிவபெருமான் பிரணவப்பொருள் மந்திரம் உபதேசிக்க பெறுவதற்கு முன், குழந்தை கடவுள் முருகனை தியானித்த இடம் திருத்தணிகை. ‘மக்கள் மெய்தீண்டல், உடற்கின்பம், மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செழிக்கும்’ என்று தந்தை சிவபெருமான் பெருமுழக்கம் செய்து சிரித்து மகிழ்ந்தார். இதனால், இத்தலத்து இறைவன் வீரஅட்டகாசர் என்று அழைக்கப்படுகிறார்.
திருமால்: மும்மூர்த்திகளில் இரண்டாவது மூர்த்தியான பெருமாள், தாரகாசுரனிடம் தன் சக்கரம், சங்கை இழந்தார்; அவற்றை திருத்தணிகையில் முருகனை வழிபட்டு, மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின் மேற்கே உள்ளது. மனித அவதாரமான ராமபிரானும் இங்கு வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ராவணனை வெல்லும் ஆற்றலையும், அருட்படைகளையும் பெற, இங்கு வந்து முருகனை வழிபட்டுள்ளாராம். ராவணனை வென்ற பின், மீண்டும் இங்கு வந்து முருகனை வழிபட்டு சிவஞானம் பெற்றாராம். ராவணனை விஜயம் பெற்று வந்ததனால், இங்குள்ள ராமபிரானுக்கு விஜயராகவ பெருமாள் என்ற பெயர் வந்தது.
பிரம்மா: படைக்கும் கடவுளான பிரம்மா இத்திருத்தலத்தில் முருகனை பூஜித்து, படைப்பு தொழில் செய்யும் ஆற்றலை பெற்றார். சூரபதுமனால் கவரப்பட்ட தன் செல்வங்களையும் திரும்பப் பெற்றார். கலைமகளும் முருகனை பூஜித்துள்ளார். மலையடிவாரத்தில் மலை மேல் ஏறிச்செல்லும் வழியில், பிரம்ம தேவர் உண்டாக்கிய பிரம்ம சுனை எனும் தீர்த்தம் உள்ளது.
திருக்கோவில் அமைப்பு; மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 365 படிகள் உள்ளன. ஒரு ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் அடையாளமாக திகழ்கிறது. படிகளின் உயரம் அளவாக இருப்பதால், பக்தர்கள் ஏறுவதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. பக்தர்கள் திருப்புகழ் பாடல்களை பாடிக் கொண்டே மலைப்படிகளில் ஏறுவது எளிதாக இருக்கும். பாதி மலைப்படிகளில் ஒரு சுனை உள்ளது. அது பிரம்ம சுனையாகும். இதை தரிசித்து விட்டு, அங்குள்ள விநாயகர், பிரம்ம லிங்கேஸ்வரர் இருவரையும் வணங்கி, மலை உச்சிக்கு செல்ல வேண்டும். அங்கு, தேர் வீதியாக கிழக்கு வெளிப்பிரகாரம் உள்ளது. இப்பிரகாரத்தின் துவக்கத்தில் கர்ப்பூர கொப்பை, சுவாமி சன்னிதிக்கு நேராக உள்ளது. கிருத்திகை போன்ற சிறப்பு நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவதால், அந்த பிரார்த்தனை கர்ப்பூர கட்டிகள் இதில் எரியும்.
தேர் வீதியை வலமாக வந்தால், தெற்கு வாயிலுக்கு நேராக தென்புறத்தில் இந்திர நலச்சுனை தெரியும். இதன் தீர்த்தம் தான் இன்றும் முருகனுக்கு தனிச்சிறப்பாக பயன்படுகிறது. இதில் யாரும் இறங்குதல் கூடாது. நின்ற இடத்திலேயே தரிசித்து சென்றால், தென்மேற்கு மூலையில் வாகன மண்டபம் உள்ளது. விழாக்காலங்களில் முருகன் இம்மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தருவார். அடுத்து, மேற்கு பிரகாரத்தில் மேல்திருத்தணிக்கு செல்லும் மலைப்படிகள் உள்ளன. இப்படிகள் தொடங்கும் இடத்தில் செங்கழுநீர் விநாயகர் கோவில் உள்ளது. வடக்கு, கிழக்கு, மேற்கு தேர் வீதிகளில் இருந்து பார்த்தால், நந்தியாறு, திருத்தணி நகர் மற்றும் அழகிய காட்சிகளை காணலாம். வடக்கு பிரகார முடிவில் வடகிழக்கு மூலைக்கு அருகில், நவாப் வாத்திய மண்டபத்தில் நாள்தோறும் பூஜை வேலைகளில் மங்கள வாத்தியங்கள் வாசிப்பர். இந்து, முஸ்லிம் ஒற்றுமை உணர்வுக்கு இது ஒரு நல்ல சான்றாகும். தேர் வீதி பிரகாரத்தில் இருந்து கிழக்கு வாயிலாகவோ, மேற்கு வாயிலாகவோ சில படிகள் ஏறினால், முருகன் சன்னிதியை அடையலாம்.
ஐராவதம்: ஐராவதம் யானை முருகனை நோக்கி நிற்காமல் கிழக்கு திசையை நோக்கி நிற்கிறது. அதற்கு காரணம், இந்திரனுக்கு உரிய வாகனமான ஐராவதம் எனும் யானை, தெய்வானையின் திருமணத்தின் போது சீதனப்பொருளாக இந்திரனால் கொடுக்கப்பட்டது. ஐராவதம் யானை தன்னை விட்டு பிரியவே, இந்திரனின் செல்வம் குறைந்தது. அக்குறை நீங்க, இந்திரன் இத்திருத்தலத்தில் செங்கழுநீர் பூவால் முருக கடவுளை வழிபட்டார். வழிபாட்டிற்காக ஐராவதத்தை கொண்டு செல்ல, இந்திரனுக்கு முருகன் காட்சியளித்தார். ஆயினும், சீதனமாகத் தந்த பொருளை திரும்ப பெற்றுக் கொள்வது முறையல்ல என்று இந்திரன் தயங்கினான். ஐராவதமும் முருகனுக்கு ஊர்தியாக இருத்தலையே பெரிதும் விரும்பியது. ‘ஐராவதம் இங்கு தங்கள் சன்னிதியிலேயே தங்கியிருக்கட்டும். ஆனால், கிழக்கில் உள்ள என் உலகை நோக்கி கொண்டிருந்தால் போதும்; என் நாடும், செல்வமும் வளம் குன்றாமல் இருக்கும்’ என்று முருகனிடம் வேண்டினார். அதற்கு முருகனும் சரியென்று கூறி அருள்பாலித்தார்.
ருத்ராட்சத்திலான உற்சவர் மண்டபம்: வடகிழக்கு மூலையின் அருகே, ருத்ராட்ச விமானத்தில் முதன்மையான பெரிய உற்சவ மூர்த்தி வீற்றிருக்கிறார். விமானத்தின் மேல்பாகம் முழுதும் ருத்ராட்ச மணிகளால் அமைந்துள்ளது. இதை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பரிகாரத்தின் வடபாகத்தில் சண்முகம் மூர்த்தி உற்சவர் உள்ளார். மாலையில் பிரதோஷ வேலைகளில் 6:30 மணிக்கு தீப ஆராதனை நடக்கும். பின்னர் தான் மூலவருக்கு அபிஷேகம், பூஜை, மாலை தீபாராதனை நடக்கும். சண்முக சுவாமிக்கு கிழக்கே ஆபத் சகாய விநாயக பெருமான் உள்ளார். இவருக்கு அருகில் அருணகிரிநாதர் தனி விமானத்தில் உள்ளார். அவருக்கு தெற்கே வீரபத்ரரும், நவ கிரகர்களும் உள்ளனர். வீரபாகு தேவருக்கு தெற்கே சூரிய மூர்த்தி உள்ளார். இவருக்கு முதலில் பூஜைகள் செய்த பின், உள்ளே உள்ள சன்னிதிகளுக்கு பூஜைகள் செய்யப்படும்.
திருத்தணிகை மலை: இத்திருத்தலத்தில் முருகன், மலை மீது எழுந்தருளியுள்ளார். ஒரு தனி மரத்தின் சிகரத்து உச்சியில் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களில் மலைத்தொடர்ச்சிகள் பரவி படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால், ‘பச்சரிசி மலை’ என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால், ‘பிண்ணாக்கு மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப்பொய்கை திருக்குளம் என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் உள்ளது. இதில் யாத்ரீகர்களும், பக்தர்களும் நீராடிவிட்டு, திருநீறு பூசிக்கொண்டு பக்தி பாடல்களை பாடி, மலைப்படிகள் வழியாக செல்கின்றனர்.
ஆடி கிருத்திகை விசேஷம்: முருகனை ஆடிக்கிருத்திகையன்று இந்திரன் பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் இவ்விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின் போது, சுவாமி, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்கு சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.
தெப்ப திருவிழா: ஆடிக்கிருத்திகை திருவிழாவில் முக்கியமானது தெப்பத் திருவிழாவாகும். சரவணப்பொய்கை என்னும் திருக்குளத்தில் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறும். முதல் நாளில் தெப்பம் மூன்று முறையும், இரண்டாவது நாளில் ஐந்து முறையும், மூன்றாவது நாளில் ஏழு முறையும் தெப்பம் குளத்தைச் சுற்றி வலம் வரும். அப்போது, தெப்பத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தெப்பத்தில் ஒவ்வொரு நாளும் கச்சேரி மற்றும் பக்தி பாடல்கள் பாடப்படும். குளத்தைச் சுற்றியும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
இணையதள சேவை: பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் இணையதளம் மூலம் தங்குவதற்கான அறைகள், அபிஷேகங்கள் மற்றும் உற்சவங்களை பதிவு செய்து கொள்ளலாம். இணையதள முகவரி: email:tirutanigaimurugan@gmail.com, www.tirutanigaimurugan.tnhrce.in .
அலுவலகம்: 044- – 2788 5247, மலைக்கோவில்: 044- – 2788 5243, 044 – -2877 5201.
சூரசம்ஹாரம் இல்லை: முருகன் திருச்செந்துாரில் அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில், முருக தலங்களில் கந்த சஷ்டியின் போது, சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால், முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. இதற்காக, 1,000 கிலோ பூக்களை வெளி மாநிலங்களில் இருந்து லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டு, பலவிதமான பூக்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.