நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீரேத்தான் மந்தை திடல் நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஆக.,9 காலை விஸ்வரூப தரிசனம், கோ பூஜையுடன் விழா துவங்கியது. கிராம சாவடியில் இருந்து மணமக்கள் மேளதாளத்துடன் கோயிலுக்கு அழைத்து வந்தனர். முளைப்பாரி காப்பு கட்டுதல் நடந்தது. 11:30க்கு துவரிமான் பாலாஜி பட்டர் தரா ஹோமம், திருமாங்கல்யதாரணம் நடத்தினார். மதியம் 1:00 மணிக்கு கச்சைகட்டி நாச்சியார் திருமொழி சேவாகாலம், வாடிப்பட்டி கோஷ்டி திருமால் அடியார், மதுரை பகவத கோஷ்ட்டியினர் திருமாங்கல்ய சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண கோலத்தில் ஆண்டாள், ரெங்க மன்னர் அலங்கார மின்னொளி ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி, அர்ச்சகர்கள், பாகவதோத்தமர்கள், கிராம மரியாதைக்காரர்கள் செய்திருந்தனர்.