சாமுண்டி மலையில் சிறுத்தை பக்தர்கள் பீதி
மைசூரு: சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது. சுற்றுலா பயணியர், பக்தர்கள், அப்பகுதி மக்கள் கவனமாக இருக்கும்படி, வனத்துறை எச்சரித்துள்ளது.
மைசூரின், சாமுண்டி மலை வரலாற்று பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
சாமுண்டி மலையில் அவ்வப்போது சிறுத்தை, காட்டு யானை, கரடி, காட்டெருமை என, பல்வேறு வன விலங்குகள் நடமாடும். சமீபத்தில் சிறுத்தை நடமாடியது. இதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
சாமுண்டி மலை சாலை மற்றும் வியூ பாயின்ட் அருகில், சிறுத்தை நடமாடுகிறது. மலை அடிவாரத்திலும் தென்படுகிறது. நேற்று முன் தினம் இரவு சாலையில் சிறுத்தை நடமாடும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
சுற்றுலா பயணியர், பக்தர்கள் நடந்து மலையேறும் பாதையிலேயே சிறுத்தை தென்படுவதால், கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாடுவது, எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. மலையின் சுற்றுப்பகுதிகளில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் டிராப் கேமரா மூலமாக, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கிறோம்.இதை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மலை சாலையில் நடந்து செல்வோர், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.