சிரவை ஆதினத்தில் வேல் வழிபாடு
கோவை: சிரவை ஆதினத்தில் கோடியர்ச்சனை பெருவிழா மற்றும் வேல் வழிபாடு கணபதி வேள்வியுடன் நேற்று காலை துவங்கியது. ஆக., 14 வரை நடக்கிறது.
இதில், 200 முருகனடியார்கள், 200 வேல்களை வைத்து ‘ஓம் சரவணபவ’ என்ற திருமந்திரத்தை சிவாச்சாரியர்கள் கோடி முறை உச்சரித்து, வேலுக்கு திருநீரு சமர்ப்பித்து அர்ச்சனை செய்தனர்.
சிரவையாதினம் குமரகுருபர சுவாமிகள் கூறியதாவது:
உலகநலன் வேண்டியும், பருவமழை தவறாமல் பெய்யவும் வேல் வழிபாடும், கோடியர்ச்சனை பெருவிழாவும் ஐந்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.
தமிழர் வாழ்வியலில் பன்னெடுங்காலமாக வேல் வழிபாடு இணைந்தே உள்ளது. வேலை போற்றி சிறப்பிக்கும் வகையில் இவ்வழிபாடு நடக்கிறது.
இவற்றோடு கோடியர்ச்சனை பெருவிழாவும் நடக்கிறது. இதில், 200 அடியார்கள், ஆறு ஓதுவார்கள் அமர்ந்து திருநீற்றால் அர்ச்சனை செய்கின்றனர். உலகில் ஏற்பட்டுள்ள இடர்கள் நீங்க வேண்டும், சர்வதேச அளவில் நடந்து வரும் போர் முடிவுக்கு வர வேண்டும், மழை பொழிய வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காலை 6 முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. வழிபாட்டில் பங்கேற்பவர்களது மனம் ஒருமைப்படும். தினமும் பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.