நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலின் பஆவணி மூலத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடிப்பட்டம் ஊர்வலமாக சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளம் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் விமரிசையாக நடந்தது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஆவணி மூலத் திருவிழா ஆக.13 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பரிவார தெய்வங்களுடன் மானூர் அம்பலவாணர் கோவிலில் எழுந்தருளி கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. 4ம் திருநாளான ஆக.16ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆக.21ம் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் மானூர் எழுந்தருளி, திருநெல்வேலி நகரின் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா சென்று, பின்னர் சங்கரன்கோவில் சாலையில் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். ஆக.22ம் தேதி இரவு 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் பல்வேறு வாகனங்களில் மானூருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆக.23ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி ஆக.23ம் தேதி மாலை 5 மணிக்கு மானூரில் இருந்து சுவாமி புறப்பட்டு ரதவீதிகளில் வீதி உலா வந்து, இரவு 8 மணிக்கு நெல்லையப்பர் கோவிலை சென்றடையும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதால், விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.