நாராயணன் நாமத்தால் நன்மை விளையும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு
திருப்பூர்: ‘‘நம் பாவ, புண்ணியங்களை மன்னிப்பதால் பெற்ற தாயைவிட இறைவன் உயர்வானவர். நாராயணன் நாமத்தை தொடர்ந்து நம்பிக்கையுடன் உச்சரிப்போருக்கு இறைவன் அருள் கிடைக்கும்,’’ என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், 16-வது ஆண்டு ஆடிப்பூர விழாவையொட்டி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. நேற்று ‘ஆண்டாள் அருளிய நாராயணன் நாமம்’ என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
குடும்பத்தில் அண்ணன்–தம்பி, அக்கா–தம்பி, தாய்–மகன் உள்ளிட்ட உறவுகளை தவறான எண்ணங்களால் பிரிப்பது மகாபாவம். ஜோதிடத்தை தினமும் பார்த்து மனக்குழப்பம் அடையாமல், அளவோடு பின்பற்ற வேண்டும். குலதெய்வத்தை மனமுருகி வேண்டி, பிரச்னைகளை இறைவனிடம் கூறுங்கள்.
ஒவ்வொருவரின் பாவ, புண்ணியங்களின் கணக்கு அழியாது. இறைப்பணியில் ஏமாற்றக்கூடாது. நாராயணன் நாமத்தை தொடர்ந்து உச்சரிப்போருக்கு நன்மையே விளையும்.
குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுப்பது பெற்றோரின் கடமை. உணவு உண்ணும் முன் கைகளுடன் கால்களையும் கழுவி, தரையில் அமர்ந்து உண்பது போன்ற நல்ல பழக்கங்களையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.