உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூரு தசரா ஜம்பு சவாரி; முதல்கட்டமாக 9 யானைகள் கஜபயணம் துவக்கம்

மைசூரு தசரா ஜம்பு சவாரி; முதல்கட்டமாக 9 யானைகள் கஜபயணம் துவக்கம்

மைசூரு: மைசூரு தசரா ஜம்பு சவாரியில் பங்கேற்கும் யானைகளில், முதல்கட்டமாக, ஒன்பது யானைகளின் கஜ பயணம் இன்று துவங்குகிறது.


மைசூரு தசரா திருவிழா அக்., 11 முதல், 21ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவின் நிறைவு நாளில் நடக்கும் ஜம்பு சவாரியில், 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து செல்லும் யானையுடன், 14 யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும். இந்தாண்டும் நான்கு பெண் யானைகள் உட்பட, 14 யானைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த யானைகளில் முதல்கட்டமாக ஒன்பது யானைகளின் கஜ பயணம், இன்று காலை 10:00 மணிக்கு, மைசூரு மாவட்டம், ஹூன்சூரின் வீரனஹொசஹள்ளி அருகில் உள்ள நாகரஹொளே தேசிய பூங்கா நுழைவு வாயிலில் நடக்கிறது. இதில், 15க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை குழுக்களுடன், பாரம்பரிய பூஜைகளை செய்து, கஜ பயணம் துவங்குகிறது. இதில், 6,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என தெரிய வந்துள்ளது. அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.


இன்று துவங்கும் கஜ பயணம், மைசூர் அசோகபுரத்தில் உள்ள ஆரண்ய பவனில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும். 28ம் தேதி காலை 9:52 முதல் 10:19 மணிக்குள் துலா லக்னத்தில் அரண்மனை முன்புள்ள ஜெயமார்த்தாண்டா வாயில் வழியாக, அரண்மனைக்குள் நுழையும். இந்த யானைகளுக்கு அரண்மனை நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து, வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக ஐந்து யானைகள் புறப்படும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். அரண்மனை வளாகத்தில் யானைகள், அதன் பாகன்கள், உதவியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்காக, ஷெட்கள் கட்டப்பட்டு உள்ளன. தசரா முடியும் வரை இரண்டு மாதங்கள் அவர்கள் இங்கு தங்கியிருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !