உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்; அதிபத்த நாயனாருக்கு சிறப்பு ப;ஜை

 நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்; அதிபத்த நாயனாருக்கு சிறப்பு ப;ஜை

நாகப்பட்டினம்: நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் நடுக்கடலில் எழுந்தருளி காட்சியளித்ததை நினைவு கூறும் வகையில், கடலில் தங்க மீன் விடும் வைபவம் நேற்று நடந்தது.


நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் முதல் மீனை, சிவபெருமானை நினைத்து வணங்கி கடலில் விட்டு விடுவது அவரது வழக்கம். அவரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் சில நாட்கள் அதிபத்த நாயனாரின் வலையில் மீன்கள் சிக்காமல் செய்தார். பின்னர், நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் படி செய்துள்ளார். வறுமையில் வாடிய நிலையிலும் வலையில் சிக்கும் ஒரு மீனையும், இறைவனை நினைத்து கடலில் விட்டு விட்டு வெறுங்கையுடன் நாயனார் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதிபத்த நாயனார் குடும்பத்தினர் உணவில்லாமல் வறுமையில் வாடிய நிலையில், ஒருநாள் அதிபத்த நாயனாரின் வலையில், நவரத்தினங்களால் ஆன தங்கமீன் சிக்கி உள்ளது. தங்க மீனாயினும் தயங்காமல், சிவனுக்கே உரியது என மகிழ்ச்சியோடு கடலில் விட்டுள்ளார்.


அதிபத்த நாயனாரின் தீவிர பக்தியை மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி அதிபத்த நாயனாருக்கு காட்சியளித்தார். அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வலையில், நேற்று நீலாயதாட்சியம்மன் கோவிலில், சிவபெருமான் தேவியருடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் மேளதாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் சிவபெருமானையும், அதிபத்த நாயனாரையும், புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். புதிய கடற்கரையில் ஆரிய நாட்டுத் தெரு கிராம மீனவர்கள், சீர் வரிசையுடன் வரவேற்றனர். அங்கு சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின் அதிபத்த நாயனார் படகில் சென்று கடலில் தங்க மீன் விடும் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !