ஆனந்த சுவாமி குருபூஜை விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் ராஜக்காபட்டியில் அருளாளர் ஆனந்த சுவாமியின் 13ம் ஆண்டு குருபூஜை விழாவில் ஏராளமான சாதுக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் ராஜக்காபட்டி ஆனந்த சுவாமி நகரில் அருளாளர் ஆனந்த சுவாமி சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு 13ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் ஆவாகண பூஜைகள் துவங்கின. இதில் மகாசங்கல்பம், வருணபகவான் வழிபாடு, கணபதி ஹோமம், வேத பாராயணம், திருவிளக்கு ஏற்றும் பூஜைகள் நடந்தன.
பின்னர் திருக்குட கலசத்திற்குள் ஆனந்த சுவாமியை ஆவாகணம் செய்யும் பூஜைகள் நடந்தன. யாக வேள்வியில் வேத பாராயணம், கனி, மூலிகை வேள்வி, மகா பூர்ணாஹூதி, பேரொளி வழிபாடு, புனிதநீர் குடி யாத்திரை அனுமதி பெறும் நிகழ்வு நடந்தது.
தொடர்ந்து பிரசன்ன வெங்கடேஷ் ஐயர் தலைமையில் திருக்குட கலசங்கள் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆனந்த ஈஸ்வரர், அருளாளர் ஆனந்த சுவாமிக்கு மகா அபிஷேகம், பூரண கும்ப தீர்த்தத்தினால் அபிஷேகம், புஷ்ப அலங்காரம், போற்றி வழிபாடு நடத்தப்பட்டன. தீபாராதனைகள் நடந்தது.
விழாவில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ராமச்சந்திரன் ராஜேஸ்வரி, அசோக்பாண்டியன் சுஜித்ரா, இஷாந்த்குமார் - சுகன்யா செய்திருந்தனர்.