மஹாராஷ்டிராவில் தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.27,000க்கு விற்பனை
நாசிக்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள இனிப்புக் கடையில், தங்க முலாம் பூசப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கொழுக்கட்டை, ஒரு கிலோ 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்பு கடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த ஆண்டும் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனை செய்யப்படும் இந்த கொழுக்கட்டையை நிறைய வாடிக்கையாளர்கள் பார்த்து செல்கின்றனர்.கடந்த 2021ல் தங்கமுலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை அறிமுகம் செய்யப்பட்டபோது, கிலோ 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து இருப்பதால், இந்த ஆண்டு கிலோ 27 ஆயிரம் ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் இதன் தரம் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக இதை ஆர்வமுடன் வாங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடை கட்டி, குங்கமப்பூ, ஏலக்காய் துாள், நெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொழுக்கட்டையில், 24 காரட் துாய்மையான தரம் கொண்ட சாப்பிடக்கூடிய தங்க முலாம் பயன்படுத்தப்படுகிறது.
நச்சுத்தன்மை: இதற்கு ஐரோப்பிய யூனியனின் உணவு பாதுகாப்பு அமைப்பும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. துாய்மையான தங்கம், மனித உடலின் செரிமான அமிலங்களுடன் எந்தவித வேதிவினையும் புரியாது. அது ரத்தத்தில் கலக்காமல், செரிமான மண்டலம் வழியாக அப்படியே கழிவாக வெளியேறும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தை உண்பதால் உடலுக்கு எந்தவித நன்மையோ, வைட்டமின்களோ அல்லது ஊட்டச்சத்துகளோ கிடைப்பதில்லை. இது, ஆடம்பரத்திற்காகவும், காட்சி அழகுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உணவில் பயன்படுத்தப்படும் தங்கம், 23 முதல் 24 காரட் துாய்மை கொண்டதாக இருக்க வேண்டும். நகைகள் செய்யப் பயன்படுத்தப்படும் தங்கத்தில் செம்பு, நிக்கல் அல்லது துத்தநாகம் போன்ற பிற உலோகங்கள் கலந்திருக்கும் என்பதால், அதை உட்கொண்டால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.