திருநள்ளாறு கோவில் யானைக்கு புத்தாடை அணிவித்து மகா தீபாரதனை
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் யானைக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் தனிச்சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஆலயத்தில் உள்ள சொர்ண கணபதிக்கு பலவகையான சிறப்பு திரவங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் விநாயகர் மற்றும் வீரசத்தி விநாயகருக்கு தங்கம் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கோவில் யானை பிரணாம்பிகைக்கு கஜ பூஜை மற்றும் யானைக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள்.கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.