காரைக்காலில் சூரிய பூஜை
காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் சூரிய பூஜை விழா நேற்று துவங்கியது.காரைக்காலில் திருதெளிச்சேரி என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கோவில் பத்துவில் சுயம்புவர தபஸ்வினி அம்பிகை உடனமர் பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சூரிய பகவான் பூஜித்த ஏழு ஸ்தலங்களில் ஒன்றாகும். மேலும், கி.பி. ஆறாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும்.இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சூரிய பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சூரிய பூஜை விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி சிறப்பு அபிஷேக நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது.பின், மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோவிலில், மாலை 5.30 மணிக்கு சூரிய கதிர்கள் கருவறையில் உள்ள மூலவர் பார்வதீஸ்வர் மீது விழுந்தது.அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூரிய பூஜை விழா வரும் 1ம் தேதி வரை நடக்கிறது.