திருவிடந்தையில் கருடசேவை உற்சவம்
ADDED :4856 days ago
மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில், கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில், நித்யகல்யாணப் பெருமாள் கோவில் புகழ்பெற்றது. இக்கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 62வது தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடும், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 24ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய உற்சவமான கருடசேவை, நேற்றுமுன்தினம் இரவு, கோலாகலமாக நடந்தது. அன்று பகலில், பல்லக்கில் நாச்சியார் திருக்கோல உற்சவம், மாலை சிறப்பு திருமஞ்சனம், இரவு ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு, 12:00 மணிக்கு, நித்யகல்யாணப்பெருமாள், கோவில் நுழைவாயிலில், கருடவாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்றார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.