பாசக்கார மகன்
ADDED :4698 days ago
சீதை தன் கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தாள். அப்போது ,சிவபெருமான் தசரதரை சொர்க்கத்திலிருந்து அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த தசரதர், ராமனைக் கட்டித் தழுவி,ராமா! கைகேயி என்னிடம் பெற்ற வரத்தின்போது, நெஞ்சில் கூரிய வேல் தைத்தது போலிருந்தது. அன்று ஏற்பட்ட வலி இன்று உன் காந்தக்கல் மேனியைத் தழுவிய பிறகே நீங்கியது,என மகிழ்ந்தார். விண்ணுலம் சென்றும் கூட தசரதருக்கு கைகேயி, பரதன் இருவரையும் மன்னிக்க மனம் இல்லை. ஆனால், ராமரோ இது தான் சமயம் என்று தந்தையிடம் வரம் கேட்டார். நீங்கள் பரதனைத் தம்பியாகவும், கைகேயியை என் தாயாகவும் எனக்குத் தரவேண்டும் என வேண்டினார். பரதனைத் தம்பியாக ஏற்க சம்மதித்த தசரதர், கைகேயியை மன்னிக்கத் தயங்கினார். ஆனாலும், ராமர் போராடி தந்தையின் மனதை மாற்றினார். இதை அறிந்த அனைவரும் ராமரின் தாய்ப்பாசத்தைக் கண்டு ஆச்சர்யம் கொண்டனர்.