உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கேறுகிறார் வாதவூரன் மாணிக்கவாசகரை அறிய வாருங்கள்

அரங்கேறுகிறார் வாதவூரன் மாணிக்கவாசகரை அறிய வாருங்கள்

மாணிக்கவாசகரின் காவியக் கதையான, "வாதவூரன் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் ஆக.,17, 18ம் தேதிகளில் கூடுதல் காட்சிகளுடன் அரங்கேற்றப்படுகிறது.  "திருவாசகத்துக்கு உருகார்; ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது, மூத்தோர் மொழி. அவ்வாறான திருவாசகத்தை இயற்றிய, மாணிக்கவாசகரின் வாழ்க்கை, காவியக் கதையாக மேடையில் அரங்கேறி வருகிறது. சென்னை, தி.நகர், வாணி மகாலில் அரங்கேறிய, "வாதவூரன் நாடகத்தை, தினமும் நூற்றுக்கணக்கானோர் கண்டு மெய் மறந்தனர். அந்த அரிய வாய்ப்பு, கோவை மக்களுக்கும், வந்துள்ளது. கோவையில் ஆக.,17, 18 ஆகிய இரு நாட்கள், இந்நாடகம் அரங்கேற்றப்படுகிறது. மதுரை மாவட்டம் திருவாதவூரில் பிறந்த நம் மாணிக்கவாசகர், இளம் வயதிலேயே பாண்டிய மன்னனால் இனம் காணப்பட்டு, நாட்டின் முதல்வராய் உயர்ந்தவர். ஒரு நாட்டின், ஆளுமைத்திறனுக்கு உற்ற துணையாக பாண்டியனுக்கு பணிபுரிந்த மாணிக்கவாசகருக்கு, ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக, படையின் பலம் பெருக்கும் நோக்குடன், குதிரைகள் வாங்கும் பணியின் நிமித்தம், அவர் கோடியக்கரை செல்ல நேர்கிறது. 40 ஆயிரம் பொற்காசுகளுடன் செல்லும் மாணிக்கவாசகர், வழியில் ஆவுடையார் கோவிலில், இறைவனை தரிசிக்கச் சென்றார். உருவமில்லா உன்னதம் ஆவுடையார் கோவில், ஓர் அற்புத சிறப்புடையது. அங்கு ஆவுடையில் இல்லை, ஆண்டவன் சிலை; ஆழ்ந்திருக்கும் மனத்தில், அருவத்தில் சில கணம் ஆனந்த தரிசனம், கண்ணால் காண்பதற்கல்ல. கோவிலின் உள்ளே சென்ற பின், உள்ளே செல்ல வைக்கும் உருவமில்லா உன்னதம். தரிசனம் முடிந்த பின் ஆரம்பம், ஓர் தர்ம சங்கடம். காரணம், சீரழிந்த கோவிலின் நிலை. குதிரைகளை வாங்குவதற்காக கொடுத்த பணத்தில், கோவில் கட்டலாமா அல்லது குதிரை வாங்கலாமா என, இரண்டு விதமான மனநிலையில் தள்ளாடுகிறது, மாணிக்கவாசகரின் மனது. கடைசியில், மனதில் ஓர் எண்ணம் உதிக்கிறது. படை வாங்க வந்த பணத்தில், கோவில் கட்டலாம் என்று முடிவு செய்கிறார். ஓர் உந்துதலில், அவர் கோவிலைச் சீரமைக்கிறார்; குதிரை வாங்க மறுக்கிறார். பாண்டியன் செய்தி அறிந்து, அவரை கைது செய்து, சித்திரவதை செய்கிறான். என்ன ஏற்படினும், தான் செய்தது சரியே என, உறுதியாக நம்பும் மாணிக்கவாசகர், "சிவனே அகம்; அகமே சிவம் உள்ளூர நம்புகிறார். பல சித்ரவதைகளை அனுபவிக்கிறார். "குதிரைகள் வரும் என்றும், மன்னரிடம் உறுதியாகக் கூறுகிறார். ஆவுடையார் கோவிலில், அவருக்கு எவ்வாறு உந்துதல் ஏற்பட்டது? கோவில் கட்டச் சொன்னது யார்? குதிரைகள் வரும் என்ற நம்பிக்கை கொடுத்தது யார்? வாதவூரர் செய்த செயல் சரியா? இறைவனின் தரிசனம், அவருக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது? இறைவனுக்காக, அவர் ஏங்கியது ஏன்? முக்கியமாய், அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றி அறியும் போது, மறைமலை அடிகளின் ஆராய்ச்சி, குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் திருவெண்பாவில் பாடிய பாடல்கள், ஒரு தந்தையின் நிலையில், அவருக்குண்டான அன்பினையும், பாசத்தையும் பறைசாற்றுகின்றன. இந்த வகையில் மனைவி, மக்கள் கொண்ட, ஒரு தனிப்பற்றுடைய தந்தையாய் இருந்திருந்தால், எப்படி இருந்திருப்பார் என, எண்ணிப் பார்க்க முடிகிறது. அணையில்லா வெள்ளம் மீண்டு வர முடியாத, அணையில்லா வெள்ளம் போன்ற கருணையால் ஆட்கொள்ளப்பட்டவனை, மீண்டும் முதல் அமைச்சனாய் வரச் சொன்ன மன்னனுக்கு, மாணிக்கவாசகரின் பதில், நம் நாடகத்தின் நிறைவாகி, அவரது அடுத்த கட்ட வாழ்க்கையின் ஆரம்பமாகிறது. வாதவூரனின் வாழ்க்கையை, மேடையில் காணலாம்.
நாடக நேரம்: மாலை 6:45 மணி. இடம்: கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம் "ஏசி டிக்கெட் விவரங்களுக்கு: 96000 35375, 97106 33633


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !