பாலியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
செங்குன்றம்: வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பாலியம்மன் கோவிலில் பக்தர்கள் நேற்று தீ மிதித்தனர். சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை ஒட்டி தீ மிதி விழா நேற்று மாலை நடந்தது. கடந்த 16ம் தேதி காப்பு கட்டிய பக்தர்கள், விரதமிருந்து நேற்று மாலை பூக்குழியில் இறங்கி தீ மிதித்தனர். தீ மிதி உற்சவத்திற்காக பொதுமக்கள் அம்மனை வணங்கி, விறகுகளை பூக்குழியில் வைத்தனர். நேற்று முன்தினம் அக்னி சட்டி உற்சவம் நடந்தது. 950 பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து நீராடி, நேற்று மாலை தீ மிதித்தனர். அதன்பின் அம்மன் திருவீதி உலா நடந்தது. வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். செங்குன்றம் லட்சுமி அம்மன் கோவிலிலும் நேற்று மாலை தீ மிதி திருவிழா நடந்தது. அதில் 500 பேர் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்களின் பாதுகாப்பு பணியில், அந்தந்த பகுதி போலீசார் ஈடுபட்டனர்.